அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும் – நயினார் நாகேந்திரன்..
நெல்லை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “எனது அருமை சகோதரர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். புதிய கட்சி தொடங்குவது குறித்து அண்ணாமலை இதுவரை யாரிடமும் பேசவில்லை” என்றார்.
ஜூன் 4, 2026: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், இருவருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது 42வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நயினார் நாகேந்திரன்:
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் என் ஆருயிர் தம்பி திரு. @annamalai_k அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் சிறந்த ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம்… pic.twitter.com/7Z3Xy4W8ZV
— Nainar Nagenthran (@NainarBJP) June 4, 2026
அந்த வகையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிறந்தநாள் காணும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர், என் ஆருயிர் தம்பி அண்ணாமலை அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவர் சிறந்த ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்றாக அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் உள்ளன. அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தலைமை நிர்வாகிகளை சந்தித்ததாகவும், தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அண்ணாமலை கட்சி தொடங்குவது பற்றி தெரியாது:
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “எனது அருமை சகோதரர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். புதிய கட்சி தொடங்குவது குறித்து அண்ணாமலை இதுவரை யாரிடமும் பேசவில்லை” என்றார்.
மேலும், “எனக்கும் அண்ணாமலைக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. எங்கள் மத்தியில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது” எனவும் அவர் தெரிவித்தார்.
திமுக அரசுக்கும் இந்த அரசுக்கும் வித்தியாசம் இல்லை:
தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்த அவர், “கடந்த திமுக அரசுக்கும் தற்போது உள்ள தமிழக வெற்றிக்கழக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன” என குற்றஞ்சாட்டினார்.
மேலும் படிக்க: எம்.பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி?.. விருப்பம் தெரிவித்த முதல்வர் விஜய்.. இதுதான் காரணம்!!
மேலும், “தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூரில் ‘பாட்டிலுக்கு 10 ரூபாய்’ என முதலமைச்சர் விஜய் பேசியிருந்தார். ஆனால் தற்போது அவரது ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படுவது போல தெரியவில்லை” எனவும் அவர் விமர்சித்தார்.
அத்துடன், “இது சிறுபான்மையினருக்கான அரசா அல்லது அனைவருக்குமான அரசா என்பதை முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும். கொச்சையான வார்த்தை பயன்பாட்டை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும்” எனவும் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.