ராஜ்யசபா இடைத்தேர்தல்: பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு தாக்கல்!
Praveen Chakravarthy Files Nomination : ராஜ்ய சபா இடைத் தேர்தலில் தமிழகம் சார்பில் காலியாக உள்ள ஒரு எம்.பி. இடத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். இவர், அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால், மாநிலங்களவையில் தமிழகத்துக்கான ஒரு எம்பி பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கும் எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில், யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பது தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். அத்துடன், மாநிலங்களவை பதவியை தங்களுக்கு தர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர். அதன்படி, எம்பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி தமிழக வெற்றி கழகம் முடிவு செய்தது.
பிரவீண் சக்கரவர்த்தி வேட்பு மனு தாக்கல்
அதன்படி, ராஜ்யசபா இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர், இன்று வெள்ளிக்கிழமை ( ஜூன் 5- ஆம் தேதி) முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவரது வேட்பு மனுவை, சுமார் 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும், 10 எம்எல்ஏக்கள் வழிமொழிய வேண்டும். இவரை தவிர்த்து பிற கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், சுயேச்சை வேட்பாளராக இருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் படிக்க: “திமுக ஆட்சியில் சரண்டர் செய்யப்பட்ட மருத்துவ இடங்கள் உதயநிதிக்கு தெரியுமா?”.. அமைச்சர் அருண்ராஜ் பதிலடி!




தமிழகத்தின் உரிமைகளை காக்க பாடுபடுவேன்
இதைத் தொடர்ந்து, பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் விஜயின் பெருந்தன்மை, கருணை ஆகியவற்றின் காரணமாக மாநிலங்களவை எம்பி சீட் எனக்கு கிடைத்துள்ளது. பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் எனக்கு கொடுத்த வாய்ப்பாகும். பாராளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்காக எனது குரல் ஓங்கி ஒலிக்கும். தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் ஆகியவற்றை பாராளுமன்றத்தில் எடுத்து சொல்வதற்காக பாடுபடுவேன்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவையில் இரு இடங்களை பெற்ற காங்கிரஸ்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்த நிலையில், மாநிலங்களவை இடத்துக்கு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த வேட்பாளர் அறிவிக்கப்பட்டு எம்பியாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் வலியுறுத்தலின் அடிப்படையில், இந்த எம்பி இடம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்த போது ஒரு எம் பி இடமும், தவக கூட்டணியில் இணைந்த பின்னர் ஒரு இடமும் என 2 மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: யார் இந்த அண்ணாமலை? காக்கிச் சீருடை முதல் அரசியல் அதிரடி வரை.. முழு அரசியல் பயணப் பார்வை!!