ஜூன் 18 முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் கூடுகிறது.. ஆளுநர் உரையுடன் தொடக்கம்!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் புதிய கூட்டத்தொடர் வருகிற ஜூன் 18-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தலைவர் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்து இக்கூட்டத்தொடர் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்டார். கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது உள்ளிட்ட மற்ற விவரங்கள் அனைத்தும் முறைப்படி அறிவிக்கப்படும்
சென்னை, ஜுன் 05: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் புதிய கூட்டத்தொடர் வருகிற ஜூன் 18-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டமன்றத் தலைவரும், சபாநாயகருமான ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டத்தொடர் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர், 2026ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 18-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூடும் என்றார்.
இதையும் படிக்க: “தவறு செய்தால் கடும் நடவடிக்கை!”.. முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை!
ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடக்கம்:
“கூட்டத்தொடரின் முதல் நாளில் தமிழ்நாடு ஆளுநர் உரையாற்ற உள்ளார்கள். ஆளுநர் உரை நிகழும்போது என்னென்ன நடக்கப் போகிறது என்பதை நீங்களே நேரில் பார்க்கத்தான் போகிறீர்கள்”. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். அக்கூட்டம் முடிந்த பிறகு, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது உள்ளிட்ட மற்ற விவரங்கள் அனைத்தும் முறைப்படி அறிவிக்கப்படும்” என்று சபாநாயகர் விளக்கமளித்தார்.
பேரவையின் முதல் பெண் செயலாளர் நியமனம்:
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பும் வெளியானது. அதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வரலாற்றிலேயே முதல் பெண் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத் தொடர் முழுமையாக நேரலை செய்யப்படுமா? சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்படுமா என்ற கேள்விக்கு சபாநாயகர் பதிலளிக்கையில், “தமிழக மக்கள் பெரும்பான்மையை நிரூபிக்கின்ற காலகட்டத்தை நேரலையில் பார்த்த பிறகு, சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, அரசியலில் இதுவரை நேரடியாகத் தொடர்பில்லாத இளம் வயதினர், தாங்கள் விரும்பிப் பதவியில் அமர்த்தியிருக்கிற முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை நேரடியாகப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். இது குறித்து ஆராய்ந்து, உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதிமுக விவகாரம், பிற மனுக்கள் மீது ஆய்வு:
அதிமுக விவகாரம் தொடர்பாகச் சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்துக் கேட்கப்பட்ட போது, “எங்களிடம் அளிக்கப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் மீது தற்போது தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வு முடிந்த பிறகு, உரிய நேரத்தில் அது குறித்தான முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக உங்களுக்கு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பின் தொடக்கத்திலும் முடிவிலும் ஊடகவியலாளர்களுக்குச் சபாநாயகர் சில அறிவுரைகளையும் வேண்டுகோளையும் விடுத்தார்.
இதையும் படிக்க: “ரஜினிகாந்த் அழைப்பை மறுத்து மன்னிப்பு கேட்டேன்”.. ரகசியம் உடைத்த அண்ணாமலை!!
செய்தியாளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு அமைதியின்மையை உருவாக்குவதையும், சபாநாயகர் பேசுவதற்கு முன்பாகவே அவரது மேஜையில் உள்ள செய்திப் தாள்கள்/குறிப்புகளைப் படம் பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும், முறையான செய்தி சேகரிப்பிற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.