ராமதாஸ் – சசிகலா அமைக்கும் புது கூட்டணி?… தைலாபுரத்தில் நடந்த திடீர் சந்திப்பு… பின்னணி என்ன!
PMK Ramadoss Sasikala Meet: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுடன், புதிதாக கட்சி தொடங்கி சசிகலா திடீர் சந்திப்பை மேற்கொண்டார். இந்த சந்திப்பின்போது, திமுக-அதிமுக கூட்டணி கட்சிகள் இல்லாத புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது கூட்டணியை இறுதி செய்து விட்டன. ஆனால், ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் சசிகலா தொடங்கிய புதிய கட்சி ஆகியவை தங்களது கூட்டணி குறித்த அறிவிப்பை தற்போது வரை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதில், ராமதாஸ் தரப்பினர் அதிமுக கூட்டணியில் பங்கேற்பதற்காக கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஏற்கனவே இந்த கூட்டணியில் அன்புமணி தரப்பிலான பாமக அங்கம் வகித்து வருவதால், ராமதாஸ் தரப்பையும் இணைத்தால் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று எடப்பாடி மறுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன், ராமதாசை கூட்டணியில் சேர்ப்பதற்கு அன்புமணியும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால், திமுக கூட்டணியில் இணையலாம் என்று ராமதாஸ் தரப்பில் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இணைவதற்கு ராமதாஸுக்கு தடை
ஆனால், அந்த கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஜாதிய அடிப்படையில் செயல்பட்டு வரும் ராமதாஸ் தலைமையிலான பாமக கூட்டணியில் இணைந்தால், நாங்கள் அந்த கூட்டணியை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்திருந்தார். இதனால், திமுக கூட்டணியின் கதவும் அடைக்கப்பட்டது. இதனிடையே, தமிழக வெற்றி கழகத்துடன், ராமதாஸ் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
மேலும் படிக்க: தேஜ கூட்டணியில் விஜய்க்கு முதல்வர் பதவி? முக்கிய புள்ளிகள் மூலம் தூது.. ஆஃபரை ஏற்பாரா.. எதிர்பாரா!




தவெக-பாமக கூட்டணி என கசிந்த தகவல்
இது தொடர்பாக ராமதாஸ் தரப்பு பாமகவின் எம்எல்ஏவான அருள், அரசியலில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பொத்தம் பொதுவாக கருத்து தெரிவித்திருந்தார். இதனால், பாமக- தவெக கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. ராமதாஸும் ஓரிரு நாட்களில், விரைவில், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக அவ்வப்போது கூறி வருவதுடன் நிறுத்தி விடுகிறார்.
ராமதாஸுடன் சசிகலா திடீர் சந்திப்பு
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாசை, புதிதாக கட்சி தொடங்கிய சசிகலா சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பின்போது, கூட்டணி குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் இல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று இருவரும் பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே, ராமதாஸுக்கு திமுக மற்றும் அதிமுகவில் கூட்டணி கதவு அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சசிகலாவும் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இணையும் சூழ்நிலை இல்லாத நிலையில், இந்த சந்திப்பு அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!