சீமான் சின்னம் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் உத்தரவு!
Indhiya Jananayaga Katchi: எஸ். ஆர். எம். குழும தலைவர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கி இந்த சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி, அரசியல் கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதில், கூட்டணி பேச்சு வார்த்தை முதல் பிரச்சாரம் வரை அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கீகாரம் பெறாத கட்சிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் தங்களுக்கான தேர்தல் சின்னங்களை ஒதுக்க கோரி மனு அளித்து வருகின்றன. அதன்படி, தமிழக அரசியல் களத்துக்கு புது வரவான தமிழக வெற்றிக் கழகம் சுமார் 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலை தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தது. இதில், அந்த கட்சிக்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்திய ஜனநாயக கட்சிக்கு சீமானின் மைக் சின்னம்
இதே போல, எஸ். ஆர். எம். குழும தலைவர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியும் தங்களுக்கு சின்னம் ஒதுக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தது. இந்த மனுவை பரிசீலனை செய்த தலைமை தேர்தல் ஆணையம், அந்த கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தற்போது மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மைக் சின்னமானது கடந்த மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..




அதிமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு குறைவான தொகுதிகள்
தற்போது, இந்த சின்னம் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிட்டால் இந்த சின்னத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே, அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இந்த கட்சிக்கு 5- க்கும் குறைவான தொகுதிகளை ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுவார்களா என்பது சற்று சந்தேகமாக உள்ளது.
தனி சின்னம் கோரி மனு அளித்த பாரிவேந்தர்
கடந்த 2024- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பாஜகவின் சின்னமான தாமரையில் போட்டியிட்டு இருந்தார். தற்போது, தங்கள் கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து தனி சின்னத்தை அந்த கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Perambur Constituency Election 2026: மழைநீர் வடிகால் முதல் போக்குவரத்து நெரிசல் வரை.. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் நிலவரம் என்ன?