புதுச்சேரியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3- ஆம் இடம்.. முதல்வர் பதவியேற்பு விழாவில் திடீர் மாற்றம்.. என்ன காரணம்!
Tamil Thai Vazhthu Sung : தமிழகத்தை போல, புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் என். ரங்கசாமி பதவியேற்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து 3- ஆவதாக பாடப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு பாடல் பாடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டி எழுந்துள்ளது.
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று இன்று புதன்கிழமை ( மே 13- ஆம் தேதி) ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது, என். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி 5- ஆவது முறையாக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து 3- ஆவதாக பாடப்பட்டது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, 2- ஆவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. 3- ஆவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு விழாக்கள் மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள் என அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவது பாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
3- ஆவதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து
ஆனால், வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை பாடிய பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. இதே போல, தமிழகத்தில் கடந்த மே 10- ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராக பதவி ஏற்றார். அப்போது, முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 3- ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதுவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களை கிளப்பியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
மேலும் படிக்க: தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு.. முதல்வர் விஜய்யின் தீர்மானம் நிறைவேற்றி வெற்றிப்பெற்றது என அறிவிப்பு..




மத்திய அரசு அனுப்பிய நிகழ்ச்சி நிரல்
தமிழக அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஆகியவற்றில் முதலாவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் எனவும், இறுதியில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் இதுபோன்று நடந்ததை அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு, தமிழக வெற்றி கழக அரசு சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டு இருந்தது. அதில், மத்திய அரசு தயார் செய்து அனுப்பிய முதல்வர் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிரலில் முதலில் வந்தே மாதரம். 2- ஆவதாக தேசிய கீதம். 3- ஆவதாக தமிழ் தாய் வாழ்த்து என குறிப்பிடப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் நிகழ்ச்சி நிரல் மாற்றம்
அதன் அடிப்படையிலேயே தமிழ் தாய் வாழ்த்து 3- ஆவதாக பாடப்பட்டதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதுச்சேரி முதல்வர் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதன்பின்னர் வந்தே மாதரம், தேசிய கீதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து 3- ஆவதாக மாற்றப்பட்டு பாடப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க: “மனசாட்சி உள்ள மக்களாட்சி”.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் கர்ஜித்த முதல்வர் விஜய்..