லாரி மீது கார் மோதி விபத்து.. காவலர் உட்பட 6 பேர் பலி.. திருப்பூரில் சோகம்!!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், ஒரு காவலர் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் சோதனைச் சாவடிக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதியது. இந்த மோதலில் கார் லாரியின் அடியில் சிக்கி உருக்குலைந்தது.
மீட்புபணியின் போது மீண்டும் விபத்து:
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த போது அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர், விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த மற்றொரு அசம்பாவிதத்தில் அந்த காவலரும் உயிரிழந்தார். மொத்தம் இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளுள் சிக்கயவர்கள் மீட்பு:
இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தூக்கக் கலக்கத்தால் விபத்து?
இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்தவர் தூக்கக் கலக்கத்தில் இருந்தாரா அல்லது லாரி விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்டிருந்ததா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரே விபத்தில் காவலர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.