திமுக – பாஜக கூட்டணி? அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் கிடையாது.. வானதி சீனிவாசன் சூசக பதில்..
“அரசியலில் எதிரி, நண்பர் என்று யாரும் கிடையாது. தமிழகத்துக்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் நாங்கள் அதை கண்டிப்பாக ஆமோதிப்போம்; வரவேற்போம்” என திமுக எம்.பி. கனிமொழி சோமு தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்தும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் 11, 2026: அரசியலில் யாரும் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி ஏற்படுவது தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், அவரது கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில் இருந்து தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கட்சிகளின் உட்கட்சி விவகாரங்கள் மட்டுமின்றி, கூட்டணி கணக்குகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
தமிழக அரசியலில் நிலவும் மாற்றங்கள்:
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக அதிமுக மற்றும் திமுக ஒன்றிணைய முடிவு செய்யப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சி விவகாரம் முற்றிய சூழலில், அக்கட்சியில் உள்ள சில சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை எங்கெல்லாம் மழை இருக்கும்? வட உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை..
தற்போதும் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
திமுக – பாஜக கூட்டணி?
இந்தச் சூழலில், தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு திமுக எம்.பி. டி.ஆர். பாலு, தொகுதி மறுவரையறை மசோதா தமிழகத்தை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, திமுக–பாஜக கூட்டணி குறித்த தகவல்கள் பரவி வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவையும் திமுக ஆதரிக்க உள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அரசியலில் நிரந்தர எதிரி நண்பர் கிடையாது – வானதி சீனிவாசன்:
இந்நிலையில், “அரசியலில் எதிரி, நண்பர் என்று யாரும் கிடையாது. தமிழகத்துக்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் நாங்கள் அதை கண்டிப்பாக ஆமோதிப்போம்; வரவேற்போம்” என திமுக எம்.பி. கனிமொழி சோமு தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்தும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: வளர்ப்பு நாய்களைத் தெருவில் விடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் கிடையாது. திமுக–பாஜக கூட்டணி உருவாகும்போது சொல்வார்கள். உருவாகும் முன்பே நீங்கள் கூட்டணியை உருவாக்கிவிடுவீர்கள் போல” என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசனின் இந்தக் கருத்து, தமிழக அரசியலில் திமுக–பாஜக கூட்டணி குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.