அதிமுகவை பிளவுபடுத்தி உடைக்கும் எண்ணம் இல்லை… எஸ்.பி.வேலுமணி விளக்கம்
Former Minister S P Velumani : அதிமுகவை இரண்டாக பிளவு படுத்தி உடைக்கும் எண்ணம் எங்கள் தரப்பு எம். எல். ஏக்களுக்கு இல்லை என்று அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்தார். அவர் கூறியதை விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் பெரும்பான்மை இன்றி விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகம் தனது பெரும்பான்மையே நிரூபிக்கும் கூட்டம் சட்டப்பேரவையில் இன்று புதன்கிழமை ( மே 13- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், அதிமுகவில் இரு அணிகளாக செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர்களான சி. வி. சண்முகம், எஸ். பி. வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதேபோல, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான 22 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக அரசு எதிராக வாக்களித்தனர். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இரு அணிகளும் மாறி மாறி தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை எம். ஆர். சி. நகரில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை
அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. அதிமுகவை உடைக்கிறோம் என்பது அவதூறு பரப்புவதாகும். அதற்கு மாறாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். இதன் மூலம் கட்சியே முன்பு இருந்தவாறு பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களது பிரதான கோரிக்கை ஆகும்.
மேலும் படிக்க: கிளீன் பாலிடிக்ஸ் டூ டர்ட்டி பாலிடிக்ஸ்: தவெக-வை கேள்வி கேட்ட திமுக தலைவர் ஸ்டாலின்!




அதிமுகவை மீண்டும் பலப்படுத்த வேண்டும்
கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வரான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சரான கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர் பிரிந்து சென்ற போது நாங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம். மேலும், கட்சியை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். தற்போதும், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் அரவணைத்து முன்பு இருந்ததைப் போல அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று கூறினார். அதிமுகவில் சட்டமன்ற குழு தலைவர் பதவியே பெறுவதற்கு எடப்பாடி மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோர் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் உள்கட்சி பூசல் ஏற்பட காரணம்
மேலும், தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் தொடங்கியது. இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் ஒரு குழுவாகவும், எடப்பாடி தலைமையில் ஒரு குழுவாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: “அமைச்சர் பதவிக்காகத் துரோகம்”.. வேலுமணி, சி.வி. சண்முகம் மீது இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு!!