இப்படியானவரை பொதுச்செயலாளராக வைத்திருந்தால்? இபிஎஸ் குறித்து சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
C. V. Shanmugam Responses EPS Statement : சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனை எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், இப்படியானவரை பொதுச்செயலாளராக வைத்திருந்தால் என்ன செய்ய முடியும்? என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, மே 13 : எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வதாக சி.வி.சண்முகம் விளக்கமளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் தவெக அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏகள் 2 தரப்பாக பிரிந்து வாக்களித்தனர். அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 பேர் தவெக அரசுக்கு எதிராகவும், சி.வி. சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏகள் ஆதரவாகவும் வாக்களித்தனர். இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதிமுக எம்எல்ஏகளில் ஒரு தரப்பினர் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில் தான் உத்தரவிட்டேன், இதற்காகக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், சில முன்னாள் அமைச்சர்கள் திட்டமிட்டு கட்சிக்குத் துரோகம் விளைவிக்கும் வகையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர் என்றார்.




இதையும் படிக்க : “மனசாட்சி உள்ள மக்களாட்சி”.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் கர்ஜித்த முதல்வர் விஜய்..
மேலும் பேசிய அவர், தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று கூறும் முதல்வர் விஜய், ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்னைகளை பயன்படுத்தி, பிரிந்து சென்றவர்களின் வீட்டிற்குச் செல்வது எந்த விதத்தில் நியாயம்? தமிழக வரலாற்றிலேயே இல்லாத ஒரு தவறான முன்னுதாரணத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
இபிஎஸ் குறித்து சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
Chennai, Tamil Nadu | AIADMK MLA CV Shanmugam says, “On behalf of AIADMK, 25 MLAs have supported TVK Leader TN CM Vijay…EPS is lying on the issue of signature of 47 MLAs on the resolution to not support TVK. When did the 47 MLAs sign this resolution, as claimed by EPS? He… pic.twitter.com/XT9dCgHYNd
— ANI (@ANI) May 13, 2026
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், எம்எல்ஏக்கள் தன்னை சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியது பொய். எம்எல்ஏக்கள் கூட்டம் எப்போது நடைபெற்றது? கூட்டமே நடைபெறாதபோது அவர் எப்படி கையெழுத்து வாங்கியிருக்க முடியும்? என்றார்.
மேலும் பேசிய அவர், புதுச்சேரி ரிசார்ட்டில் என்ன செய்தார் என்பதை ஈபிஎஸ் சொல்வாரா? புதுச்சேரி கூட்டத்தில் தான் முதல்வராக போவதாக தெரிவித்தார். திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என கூறினார். ஆட்சியமைக்க டெல்லியில் பேசி, அனுமதி பெற்றுவிட்டதாகவும் சொன்னார். ஆனால் இன்று மறுக்கிறார். அவர் கூறும் அனைத்தும் பொய் என்றார்.
இதையும் படிக்க : குதிரைப்பேரம் குறித்து பேசிய இபிஎஸ்.. பின்னால் கிசுகிசுத்துகொண்ட சண்முகம் – விஜயபாஸ்கர்.. என்ன நடக்குது அதிமுகவில்?
தொடர்ந்து பேசிய அவர், 47 தொகுதிகளில் வெற்றி பெற்றதை மிகப்பெரிய வெற்றி என்கிறார். இப்படியானவரை பொதுச்செயலாளராக வைத்திருந்தால் என்ன செய்ய முடியும்? இது வெற்றியா? மிகப்பெரிய தோல்வி தோல்வியில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. ஆனால், இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார்