ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
O Panneerselvam House: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டில் இருந்து அகற்றப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது. அதன் அருகில் மு.க. ஸ்டாலினுடம், ஓபிஎஸ் இருக்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான படங்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் 3 முறை முதலமைச்சராக இருந்த ஒ. பன்னீர்செல்வம் அந்த கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் விவகாரம் காரணமாக நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, மீண்டும் அதிமுகவில் உரிமைகளை பெரும் நோக்கில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற கழகத்தை தொடங்கி நடத்தி வந்தார். இவருக்கு ஆதரவாக, எம்எல்ஏக்கள், முன்னால் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால், அதிமுகவில் மீண்டும் இணைய முடியாத காரணத்தாலும், இழந்த உரிமைகளை பெற முடியாத காரணத்தாலும், நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தாலும், ஓ. பன்னீர் செல்வத்தை விட்டு அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகத் தொடங்கினர். அதன்படி, ஓ பன்னீர்செல்வம் அணியின் அச்சாரமாக விளங்கி வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தனியாக கட்சி தொடங்கினார்.
திமுகவில் ஐக்கியமான ஓ. பன்னீர் செல்வம்
அதிமுகவில் தன்னை இணைக்க கோரி பலமுறை தூதுவிட்ட ஓ. பன்னீர்செல்வத்தை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி கே. பழனிசாமியும் தெரிவித்துவிட்டார். இதனால், எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது சில ஆதரவாளர்கள் திடீரென திமுகவையும், முதல்வர் மு. க. ஸ்டாலினையும் புகழ்ந்து பேசி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 27- ஆம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார்.
மேலும் படிக்க: சிபிஐ அலுவலகமா? தவெக அலுவலகமா?… எங்கு செல்ல போகிறார் விஜய்!




ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் ஜெயலலிதா புகைப்படம் அகற்றம்
இதை தொடர்ந்து, தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அக்ரஹாரம் தெருவில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள், எம்ஜிஆரின் புகைப்படங்கள், வீட்டின் வெளிப்புற கதவில் இருந்த அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஆகியவை அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஓ. பன்னீர் செல்வத்தின் காரின் முன் பகுதியில் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டது. அத்துடன், தற்போதைய திமுக தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலின் படம் வைக்கப்பட்டது.
ஓபிஎஸ் வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்
அவரது வீட்டிலும் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன், ஓ பன்னீர்செல்வம் இருப்பது போன்ற புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதே போல, ஓபிஎஸ்- இன் இளைய மகன் ஜெயபிரதீப்பும் தனது எதிர்ப்பை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வத்தின் வீட்டில் திடீரென மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன், ஓ. பன்னீர்செல்வம் இருக்கும் புகைப்படம் பொருத்தப்பட்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியாகின. அதன் அருகில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன், ஓபிஎஸ் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க: விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்.. கடைசியில் “பிம்பிளிக்கி… பிளாப்பி”.. சீமான் கடும் விமர்சனம்..