21 அதிமுக எம்எல்ஏக்களின் பதவி தப்பியது.. 4 பேர் சிக்கினர்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்!
Speaker J. C. D Prabhakar : அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சட்டப் பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்பி வேலுமணி மற்றும் சி. வி. சண்முகம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இருவர் தலைமையிலும் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட்சி தாவல் சடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரிடம் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் முதலில் மனு அளிக்கப்பட்டது.
21 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை
அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி 4 கடிதங்களை அனுப்பி இருந்தார். இந்த கடிதங்களை முறையாக பரிசீலனை செய்து விரிவான ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டேன். அத்துடன் பேரவை விதிகளை மனதில் ஏற்றுக் கொண்டேன். தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்த 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த 21 எம்எல்ஏக்களையும் மன்னிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் அளித்ததை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் படிக்க: திமுகவில் அதிரடி மாற்றம்.. மா.செக்கள் அதிகாரம் அதிரடியாக குறைப்பு? விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!




4 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை
இதில், கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வாக்களித்ததற்காக பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா, தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் முடிந்த பின்னர் அது தொடர்பாக அறிவிப்பேன் என்று தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
அதிமுகவில் இரு அணிகளாக உருவான எம்எல்ஏக்கள்
இதில், திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பினர் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கூறினராம். இதற்கு எடப்பாடி மறுப்பு தெரிவிக்கவே அந்த கட்சியில் கருத்து மோதல் ஏற்பட்டு இரு அணிகளாக பிரிந்து செயல்பட தொடங்கினர். தற்போது, எஸ். பி. வேலுமணி தரப்பினர் அதிமுகவுடன் மீண்டும் இணக்கமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: காங்கிரஸ் அணுகுமுறையால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி… இண்டி கூட்டணி கூட்டத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு!