ரூ.397 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு.. கை மாறியது வழக்கு.. களமிறங்கியது சிபிஐ!
CBI Files Case Transformer Procurement Scam: தமிழக மின்சாரத்துறையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் 2021 முதல் 2023- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செந்தில் பாலாஜி மின்சார துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, 45 ஆயிரம் ட்ரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ.397 கொடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு அறப்போர் இயக்கம் சார்பிலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சரவணன், ராஜ்குமார் ஆகியோர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு, இந்த முறைகேடு புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரம் தொடர்பான புதிதாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை
அதன்படி, ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் சிபிஐ அதிகாரிகள் விரைவாக விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிபிஐயின் விசாரணைக்கு டான்ஜெட்கோ, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர். இந்த நிலையில், டெண்டர் முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: ராஜ்யசபா இடைத்தேர்தல்.. வேட்பு மனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகிறார் பிரவீன் சக்கரவர்த்தி!




மின்மாற்றி கொள்முதல் என்ன முறைகேடு
இந்த முறை கேட்டில் குறிப்பிட்ட சில ஏலதாரர்களுக்கு தகுதியற்ற முறையிலும், விதிகளை மீறியும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் சந்தை விலையை விட அதிக விலைக்கு மின் மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசுக்கு ரூ.397 கோடி நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இதில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் இடையே கலக்கம்
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் தற்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருந்து சிபிஐ வசம் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக மின்சார துறையில் பெரும் முறைகேடாக கருதப்படும் இந்த விவகாரத்தில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க: திமுகவில் அதிரடி மாற்றம்.. மா.செக்கள் அதிகாரம் அதிரடியாக குறைப்பு? விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!