செல்போன் மோகத்தில் மூழ்கிய மகள்.. ஒரு நொடி கண்டித்த தந்தை.. மறு நொடியே மாணவி எடுத்த விபரீத முடிவு!
Erode Plus 2 Student Suicide : ஈரோடு மாவட்டத்தில் செல்போன் உபயோகித்ததை தந்தை கடுமையாக கண்டித்ததால் மன வருத்தம் அடைந்த பிளஸ் 2 படித்து வந்த மாணவி வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு மனக்காட்டுபுதூரை சேர்ந்தவர் தியானேஸ்வரன். இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு சுபஸ்ரீ ( 17 வயது) உள்பட 2 மகள்கள் உள்ளனர். இவர், வெள்ளோட்டம்பரப்பில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை சுபஸ்ரீ வீட்டில் இருந்தபோது செல்போன் உபயோகித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, இதற்கு அவரது தந்தை தியானேஸ்வரன் அடிக்கடி செல்போன் பார்க்கக் கூடாது என்று கண்டித்து விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இந்த நிலையில், பிற்பகலில் வீட்டுக்கு திரும்பிய தியானேஸ்வரன் தனது 2- ஆவது மகளிடம் சுபஸ்ரீ எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு, அவர் படுக்கை அறையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். உடனே, அவர் அறையின் கதவை தட்டிப் பார்த்துள்ளார்.
தந்தை திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி
ஆனால், கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தியானேஸ்வரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, மாணவி சுபஸ்ரீ வீட்டின் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார். உடனே, தூக்கில் இருந்து சுப ஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க: பழனி முருகன் கோயிலில் அதிரடி ஆய்வு.. அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் ரமேஷ்.. விழிபிதுங்கி நின்றனர்!




போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக சுப ஸ்ரீயின் தந்தை தியானேஸ்வரன் மலையம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகம்
செல்போன் உபயோகித்ததை தந்தை கண்டித்த காரணத்தால் மன வருத்தம் அடைந்த 12- ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணம் ஏற்பட்டால்…
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050).
மேலும் படிக்க: ராஜ்யசபா இடைத்தேர்தல்.. வேட்பு மனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகிறார் பிரவீன் சக்கரவர்த்தி!