மொட்டை அடித்தால் ரூ.15,000 – சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மொட்டை அடித்தால் ரூ.15 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, பெண்களை மோசடி செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மொட்டை அடித்தால் ஆண்களுக்கு 6,000 ரூபாயும், பெண்களுக்கு 15,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அந்த நபர் கூறியதாக சொல்லப்படுகிறது.
சேலம், ஜூலை 28: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மொட்டை அடித்தால் ரூ.15 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, பெண்களை மோசடி செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கொத்தாம்பாடி என்ற பகுதியை சேர்ந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய நபர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தாம் பேசுவதாகவும், கொரோனா பரவி வரும் நிலையில் அதை தடுக்க மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி
மேலும், மொட்டை அடித்தால் ஆண்களுக்கு 6,000 ரூபாயும், பெண்களுக்கு 15,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அந்த நபர் கூறியதாக சொல்லப்படுகிறது. பெண்களை நம்ப வைக்க, பெண்கள் சிலர் மொட்டை அடித்தது போன்ற படங்களையும் அவர் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். இதை நம்பி 20 பேர் மொட்டை அடிக்க தயாரான நிலையில், 3 பெண்கள் மொட்டையும் போட்டுள்ளனர். பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்களை ஏமாற்றிய நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க : அடித்து கொலை செய்து விடுவேன்.. தவெக நிர்வாகிக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கொலை மிரட்டல்.. வைரலாகும் ஆடியோ!




பல ஆன்லைன் மோசடிகளில் சிக்கிய பெண்
இதே போல சில நாட்களுக்கு முன் வீட்டிலிருந்தே வேலை என்று கூறி ஒரு கும்பல் தன்னை ஏமாற்றியதாக மதுரையைச் சேர்ந்த பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அமிருன்னிசா பேகம் என்பவர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் இவர், ரூ. 6,08,956 பணத்தை இழந்ததாக மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், கடந்த ஏப்ரல் மாதம் பிஎம் முத்ரா ஃபைனான்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ்ஆப் மூலம் சில நபர்கள் அமிருன்னிசாவை தொடர்பு கொண்டு, ரூ. 1 லட்சம் கடன் வழங்குவதாக கூறியுள்ளனர். அதற்காக செயலாக்க கட்டணம் என்ற பெயரில் பல தவணைகளாக பணமும் பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க : காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!
இதற்கிடையில் வெளிநாட்டில் வசிக்கும் பிரபல யூடியூபர் எனக் கூறி ஒருவர் அமிருன்னிசாவை தொடர்பு கொண்டுள்ளார். அவர் 5,600 அமெரிக்க டாலர் அனுப்பியுள்ளதாகவும், அதை பெற ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தொடர்பு கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். இதனை அமிருன்னிசாவும் நம்பி, அவர் கூறிய வழிகாட்டு முறைகளை பின்பற்றியுள்ளார். அதன்படி, டாலரை இந்திய ரூபாயாக மாற்றுவதற்கும், வங்கிக் கணக்கை மாற்றுவதற்கும் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிகேஷன் என்ற நிறுவனத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்து மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறலாம் என ஆசை காட்டி பணம் வசூலித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அமிருன்னிசா பேகம், தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகார் அளித்ததுடன், மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகார் செய்தார்.