200-க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்களிடம் ரூ.20 கோடி மோசடி.. பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு சிறை!!
20 crore fraud police families Chennai: காவலர் குடும்பங்களிடம் 20 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி உள்ளிட்ட 3 பேரின் 2 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை, ஜூலை 24: குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் மனைகள் வாங்கித் தருவதாகக் கூறி 200-க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்களிடம் சுமார் 20 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்த வழக்கில், பெண் காவல் ஆய்வாளர் உட்பட 3 பேரின் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!
காவலர்களுக்கு வலை விரித்து மோசடி:
குறைந்த விலையில் தங்கக் காசு மற்றும் மனைப் பட்டா வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி, சுமார் 200-க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்களை நம்ப வைத்து, அவர்களிடம் இருந்து சுமார் ₹20 கோடி ரூபாய் வரை சுருட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அடுத்தடுத்த கைது நடவடிக்கை:
இவ்வழக்கில் முக்கிய நபரான பிரபு மணி என்பவரை கடந்த மாதம் 9-ஆம் தேதி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பிரபு மணியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த மாபெரும் நிதி மோசடியில் தொடர்புடைய பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி, கல்பனா மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூலை 7-ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
2 நாட்கள் போலீஸ் காவல் – மீண்டும் சிறையில் அடைப்பு:
சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஆய்வாளர் ஷீலா மேரி, கல்பனா மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 3 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. 2 நாள் காவலில் அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: கண்ணிமைக்கும் நேரத்தில் சோகம்.. கோவையில் 3 மாணவிகள் மீது பாய்ந்த டிப்பர் லாரி.. ஒரு மாணவி கொடூர பலி!
வங்கிக் கணக்குகள் & சொத்துக்கள் முடக்கம்:
விசாரணையில் கைதான 4 பேரும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைதான 4 பேரின் வங்கிக் கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கிய குற்றவாளிகளான பிரபு மணி மற்றும் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி ஆகியோரின் சொத்துக்களை முடக்குவதற்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.