முடிவுக்கு வந்த தந்தை – மகன் மோதல் – வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றார். மேலும் தனக்கும், அன்புமணிக்கும் இடையே பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொண்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, ஜூலை 22 : பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றார். மேலும், தனக்கும், அன்புமணிக்கும் இடையே பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொண்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கு இடையே கட்சியின் தலைமை பொறுப்பு குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இந்த நிலையில் கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் என்றும் பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி ராமதாஸ் சார்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு…9000 பேர் வரை பாதிப்பு – அமைச்சர் எச்சரிக்கை




இதற்கிடையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தரப்பு தேசிய ஜனநாய கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில், சசிகலா தொடங்கிய அஇபுதமமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து ராமதாஸ் தேர்தலை சந்தித்தார். இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பாமகவினர் 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.
பாமக தலைவர் அன்புமணி
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டத்திற்கு நேரில் சென்று அன்புமணி தனது தாய் மற்றும் தந்தையிடம் ஆசி பெற்றார். இருவரும் கட்சி மேடைகளில் விமர்சித்து வந்த நிலையில் இருவரும் சந்தித்துக்கொண்டது பேசுபொருளானது. இதனையடுத்து இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அதற்கேற்ப ராமதாஸ் தொடர்ந்த வழக்கு ஜூலை 22, 2026 சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தங்களுக்கு சுமூகமான முடிவு ஏற்பட்டுள்ளதாக கூறி வழக்கை வாபஸ் பெற்றார். இதனையடுத்து நீதிமன்றம் வழக்கை முித்து வைத்தது.
இதனையடுத்து அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை 29, 2026 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் 2 பேரும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : “நீட் தேர்வு ரத்தே நிரந்தர தீர்வு!”.. டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பாமகவின் பொதுக் குழுக்கூட்டம் வரும் ஜூலை 29, 2026 அன்று காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் அரங்கத்தில் நடைபெறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.