பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி திடீர் சந்திப்பு.. 45 நிமிடம் நடந்தது என்ன?
Anbumani Meet Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி இன்று இரவு திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இதில், என்ன பேசப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை, அவரது மகனும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று திங்கள்கிழமை ( ஜூலை 13- ஆம் தேதி) இரவு திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி சந்திப்பின்போது பாட்டாளி மக்கள் கட்சியின் 38- ஆவது ஆண்டு விழா வருகிற ஜூலை 16- ஆம் தேதி ( வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி, அடுத்த கட்ட நடவடிக்கை, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை தொடர்பாகவும் இருவரும் தீவிர ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாசை, கட்சியின் தலைவர் அன்புமணி திடீரென சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ராமதாஸ் – அன்புமணி இடையே உள்கட்சி மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த கட்சியை சேர்ந்தவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி தலைமையில் இரு குழுவாக பிரிந்து செயல்பட தொடங்கினர். அதன்படி, அன்புமணி பாஜக கூட்டணியிலும், ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் தனி கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்தித்தனர். இதில், அன்புமணி தலைமையிலான பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ராமதாஸ், சசிகலா கூட்டணி போட்டியிட்ட எந்த தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை பெறவில்லை.
மேலும் படிக்க: நெல்லை- தென்காசியில் நாளை மின் நிறுத்தம்… எங்கெங்கு தெரியுமா.. நோட் பண்ணுங்க மக்களே!




பாமக- மாம்பழம் சின்னம் விவகாரம்
இதனிடையே, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மாம்பழம் சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோருவது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வந்த பனிப்போர் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் வரை சென்றது. அங்கு, இவர்களின் மனுக்களை விசாரித்த நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அன்புமணி தான் கட்சியின் தலைவர் என்றும், பாமக, மாம்பழம் சின்னம் அவருக்கு தான் சொந்தம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2- ஆவது முறையாக ராமதாஸ்- அன்புமணி சந்திப்பு
இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாசை, அவரது மகன் அன்புமணி திடீரென சந்தித்திருந்தார். இந்த இந்த சந்திப்பு அந்த கட்சியினர் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் திடீரென சந்தித்துள்ளார். இது அந்த கட்சியின் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் வரும் 16ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்.. பட்ஜெட் தாக்கல் எப்போது?