சிவப்பு + மஞ்சள் சேர்ந்தால் கிடைப்பது காவி.. தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin Criticized TVK Government: திராவிட கழகத்தின் இரு சக்கர வாகன பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த தமிழக வெற்றிக் கழக அரசை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இதில், சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் காவி நிறம் வரும் என்று வினவினார்.
நீட் தேர்வு மற்றும் இ.டபிள்.எஸ். இட ஒதுக்கீடு ஆகியவற்றை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் சென்னை வேப்பேரியில் இன்று வியாழக்கிழமை ( ஜூலை 30- ஆம் தேதி) இருசக்கர வாகன பேரணி நடைபெற இருந்தது. வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து இந்த பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக பெரியார் திடலில் 100- க்கும் ஏற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக இருசக்கர வாகன பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக திராவிடர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய பாஜக அரசை விட தவெக அரசுக்கு அச்சம் அதிகம்
நீட் தேர்வு மற்றும் இ. டபுள்.எஸ். இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தை பார்த்து மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு படும் அச்சத்தை விட தமிழக வெற்றிக் கழக அரசு தான் அதிகம் அச்சப்பட்டு மிரளுகிறது. தந்தை பெரியாரை கொள்கை தலைவர் என சொந்தம் கொண்டாடும் தமிழக வெற்றிக் கழக அரசு பெரியார் திடலிலேயே அதிக அளவு போலீசாரை குவித்து இருப்பது ஏன் என்றதை விளக்க வேண்டும். திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகன பரப்புரை பயணத்துக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததற்கான காரணத்தையும் விளக்க வேண்டும்.
மேலும் படிக்க: கண்டித்தது ஒரு குற்றமா? தந்தையை வெட்டி கொலை செய்த கொடூர மகன்.. வேலூரில் பரபர சம்பவம்!
திராவிட கழக பரப்புரை அனுமதி மறுப்புக்கு கடும் கண்டனம்
யாரின் அழுத்தத்துக்கு அடிபணிந்து இதை செய்கிறார்கள். கடந்த காலங்களில் மிகவும் அமைதியான முறையில், அறவழியில் கண்ணியத்தோடு இதே போராட்டங்களை தாய் கழகமான திராவிட கழகம் கட்டுப்பாட்டோடு நடத்திக் காண்பித்திருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரை பயணத்தை தடை செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி
சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகி விட்டது. அடக்குமுறை அரசியலை கைவிட்டு விட்டு, வீரமணி பரப்புரை பயணத்துக்கு உரிய அனுமதியை தமிழக வெற்றிக் கழக அரசு வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவப்பும், மஞ்சளும் என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் நிறம் ஆகும்.


