2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!
Madurantakam - Dharapuram By Election : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவும் என கூறப்படும் நிலையில், எந்த கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் அடுத்த மாதம் அக்டோபர் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. பொதுவாக இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியின் பலத்தை எடை போடும் தேர்தல் என்றே சொல்வது வழக்கம். அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்துக்கு இந்த தேர்தல் வெற்றி வாய்ப்பை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே, தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், இந்த இடைத்தேர்தலை சாதகமாக பயன்படுத்தி எம்எல்ஏக்களின் பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு அச்சாரமாக தவெக அரசின் 4 மாத ஆட்சியில் லஞ்சம், ஊழல் ஒழிப்பு கொள்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் தவெக மட்டும் தனித்து களமிறங்கிய நிலையில், தற்போது, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்பு
இதன் காரணமாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரு தொகுதிகளில் தவெகவின் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இரு வேட்பாளர்களுக்கும் தலா 45 சதவீத அளவுக்கு குறையாமல் வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன், இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளில் தவெக தலைவர் ஜோசப் விஜய் நேரில் சென்று வாக்கு சேகரித்தால், கூடுதல் வாக்குகள் கிடைத்து வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம், தவெகவின் எம்எல்ஏக்கள் பலம் 110- ஆக உயர வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: மதுராந்தகம்-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்… அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!




பலம் வாய்ந்த வேட்பாளர்களை களமிறக்கிய தவெக
அத்துடன், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த சத்தியபாமாவும் தவெக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் மேற்கண்ட தொகுதிகளில் அதிக செல்வாக்கு உள்ளது. அதனை, சிந்தாமல், சிதறாமல் தவெக அறுவடை செய்ய தனி தேர்தல் வியூகம் அமைத்துள்ளது. இது ஒரு புறம் இருந்தால், அதிமுகவின் கோட்டையாக விளங்கி வரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் எதிர்பாராத விதமாக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
3 முனைப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு
இதனால், தங்களது கோட்டையை தக்க வைத்துக் கொள்ள அதிமுகவும் தேர்தல் வியூகத்தை கட்டமைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறு மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக என மும்முனை போட்டி நிலவும் சூழ்நிலையில், உறுதியாக தவெக வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம், தவெக அரசுக்கு சற்று நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!