மதுராந்தகம்-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்… அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
Aiadmk Candidates Announced : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் ( தனி) தொகுதி மற்றும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் ( தனி) தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
மதுராந்தகம்- தாராபுரம் தொகுதி வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மகளிர் அணி இணை செயலாளருமான முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத் மதுராந்தகம் (தனி) தொகுதியிலும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழுவின் 12- ஆவது வார்டு முன்னாள் உறுப்பினருமான கே. பானுமதி தாராபுரம் தொகுதியிலும் போட்டியிடுவார். இவர்களுக்கு கட்சியினர் முழு ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: “தற்குறிகளுக்கு மிசா கைதின் வலிகள் தெரியாது” முதல்வரை கடுமையாக விமர்சித்த திமுக ஐடி விங்!




இரு தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள அதிமுக திட்டம்
அதிமுகவின் கோட்டைகளாக விளங்கிவரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தனி தொகுதிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிமுக தலைமை பல்வேறு கட்ட தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே, அதிமுகவில் மிகவும் பரிச்சயமான கணிதா சம்பத் மற்றும் பானுமதி ஆகியோர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளில் அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு விவரம்.
தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விவரம்
இதனால், இந்த இரு தொகுதிகளை மீண்டும் தன் வசப்படுத்திக் கொள்வதற்காக அதிமுகவை சேர்ந்த பெண்களை மீண்டும் இதே தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர். தற்போது, திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன், தாராபுரம் தொகுதிக்கு சுகன்யா, தவெக சார்பில் முந்தைய அதிமுக வேட்பாளர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அதிமுக சார்பிலும் இரு பெண்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், இந்த இடைத்தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள 6 வேட்பாளர்களில் பெண்களே அதிகமாக உள்ளனர். அதாவது, ஆண் வேட்பாளர் ஒருவரும், பெண் வேட்பாளர்கள் 5 பேரும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவா? தவெகவுக்கு ஆதரவா? கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன.. நாளை வெளியாகிறது அறிவிப்பு!