இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவா? தவெகவுக்கு ஆதரவா? கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன.. நாளை வெளியாகிறது அறிவிப்பு!
Communist Parties Stance By Election : தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக மற்றும் தவெக கூட்டணியில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாளை முக்கிய முடிவை அறிவிக்க உள்ளது.
தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டுமே தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலானது, அக்டோபர் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தவெக, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவும் சூழல் உள்ளது. இதில், ஒவ்வொரு கட்சிகளும் அதன் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவெடுத்துள்ளன. இதில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் யாருக்கு ஆதரவளிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2 கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் கம்யூனிஸ்டுகள் அதிகம் இல்லை. தமிழகத்தில் உள்ள 40 மாவட்டங்களில் இடதுசாரி கட்சிகளுக்கு வாக்குகள் இருக்கின்றன. எனவே, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடுவதா அல்லது தவெக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதா என்பது தொடர்பாக நாளை ( வெள்ளிக்கிழமை) இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம்.
இடைத்தேர்தல் பணிகள் விறுவிறு
இதில், 2 இடதுசாரி கட்சிகளும் ஒருங்கிணைந்து நல்ல முடிவை அறிவிப்போம் என்று தெரிவித்தார். இரு தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் திமுக கூட்டணி சார்பில் பரந்தாமன் (மதுராந்தகம்), சுகன்யாவும் (தாராபுரம்), தவெக கூட்டணி சார்பில் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.




கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன
திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் நேற்று தவெக தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், தவெக தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களின் வெற்றிக்கு தேர்தல் பணி ஆற்றுவதாக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இதே போல, தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் இருந்தது.
திமுகவுக்கு ஆதரவா அல்லது தவெகவுக்கு ஆதரவா
அதாவது, மற்ற இடதுசாரி கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து முழுவதும் வெளியேறி தவெக கூட்டணியில் ஐக்கியமான நிலையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்த கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கான பதில் நாளை தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.