மாற்று சமுதாய இளைஞரை திருமணம் செய்த மகள்.. வீடு புகுந்து அரிவாளால் வெட்டித் தள்ளிய தந்தை.. தென்காசியில் கொடூரம்!
Tenkasi Crime News : தென்காசி மாவட்டத்தில் சிவகாமிபுரத்தில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் பெண்ணின் தந்தை அரிவாளால் இருவரையும் கொடூரமாக வெட்டி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் ( 23 வயது). இவரும், திருநெல்வேலி மாவட்டம், மேல அரியநாயகிபுரத்தை சேர்ந்த சுஷ்மிதா ( 21 வயது) என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போது காதல் மலர்ந்துள்ளது. ஆனால், இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு சுஷ்மிதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஆகாஷ் மற்றும் சுஷ்மிதா ஆகியோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, தம்பதி இருவரும் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். இவர்களது திருமணத்தில் விருப்பமில்லாத சுஷ்மிதாவின் தந்தை முருகன் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
மகள்- மருமகனை அரிவாளால் வெட்டி தந்தை
இந்த நிலையில், முருகன், சுஷ்மிதா மற்றும் ஆகாஷ் வசித்து வந்த வீட்டுக்குள் அத்துமீறி உள்ளே சென்று கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மருமகன் ஆகாஷை தலை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டினார். இதில், அவர் அலறி துடித்த நிலையில், அவரது சத்தம் கேட்டு சுஷ்மிதா ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால், ஆத்திரம் தீராத முருகன் மகள் என்று பாராமல் சுஷ்மிதாவின் கை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் கொடூரமாக வெட்டினார்.
மேலும் படிக்க: கர்ப்பிணி – சிசு உயிரிழந்த கொடூர சம்பவம்.. மர வியாபாரி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு.. காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி!




அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இருவரின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் வசித்தவர்கள் வருவதைப் பார்த்து முருகன் அங்கிருந்து தனது பைக்கில் தப்பி சென்று விட்டார். உடனே, ஆகாஷ் மற்றும் சுஷ்மிதாவை மீட்ட பொதுமக்கள் அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் வேல்கனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பெண்ணின் தந்தை அதிரடி கைது
தொடர்ந்து, இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட முருகன் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரை கைது செய்தனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண்ணின் தந்தை கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் சாதிய ஆணவ கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம்.. டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!