ராஜ்யசபா இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு ஏற்பு.. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!
Praveen Chakravarty Nomination Papers Accepted: ராஜ்ய சபா இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் பிரவீன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
மாநிலங்களவையில் காலியாக உள்ள 27 எம்பி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூன் 18- ஆம் தேதி ( வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த ஜூன் 1- ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூன் 8- ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு எம்பி பதவிக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இவருடன் சேர்த்து சுமார் 14 சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மற்ற அரசியல் கட்சிகள் சார்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை ( ஜூன் 9) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழி முன்னிலையில் நடைபெற்றது. இதில், சுயேச்சை வேட்பாளர்கள் 14 பேரின் வேட்பு மனுக்கள் எம்எல்ஏக்களின் முன்மொழிவுகள் இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு ஏற்பு
பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்பு மனுவை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்தனர். இதன் காரணமாக அவரின் வேட்பு மனு ஈர்க்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார். அதன்படி, பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வாகி உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்க உள்ளது. மாநிலங்களவை எம்பி பதவியை பொருத்தவரை எம்எல்ஏக்கள் பலம் எந்த கட்சிக்கு அதிகமாக உள்ளதோ அந்த கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.
மேலும் படிக்க: காங்கிரஸ் அணுகுமுறையால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி… இண்டி கூட்டணி கூட்டத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு!




தவெகவிடம் எம்பி பதவியை வலியுறுத்தி பெற்ற காங்கிரஸ்
அதன்படி, தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு அதிக எம்எல்ஏக்கள் பலம் உள்ளதன் காரணமாக, அந்தக் கட்சியை சேர்ந்தவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எம்பி பதவியை தங்களுக்கு ஒதுக்குமாறு காங்கிரஸ் தலைமை கோரிக்கை வைத்தது. அதன் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், தமிழக வெற்றி கழகம்- காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கு முக்கிய நபராக இருந்தவருமான பிரவீன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது.
சி.வி.சண்முகம் ராஜினாமாவால் இடைத்தேர்தல்
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக மாநிலங்களவை எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். இதன் காரணமாக எம்பி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க: 21 அதிமுக எம்எல்ஏக்களின் பதவி தப்பியது.. 4 பேர் சிக்கினர்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்!