மீண்டும் ஒரு லாக்அப் டெத்? போலீஸ் விசாரணைக்கு சென்ற ஓட்டுநர் உயிரிழப்பு.. எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் நடந்தது என்ன!
Chennai Driver Dies Police Enquiry: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மது போதையில் ரகளை செய்த ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அந்தப் பகுதியில் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வெங்கடேசன் ( 28 வயது). ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று திங்கள் கிழமை ( ஜூன் 8- ஆம் தேதி) அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கும் மது அருந்துவதற்காக சென்றார். அங்கு, வெங்கடேசன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர், டாஸ்மாக்கில் இருந்து வெளியே வந்த அவர் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி அதன் ஓட்டுனர்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் எம். ஜி. ஆர். நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் பூப்பாண்டித்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசனிடம் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார்
ஆனால், அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால், அவர் போலீசாரின் பேச்சை கேட்காமல் மீண்டும் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, போலீசார் வெங்கடேசனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து, அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல் நிலையத்துக்கு வந்த ராஜேந்திரனிடம் கடிதம் எழுதி பெற்றுக்கொண்டு வெங்கடேசனை அவருடன் அனுப்பி வைத்தனர். அதன்படி, வீட்டுக்கு சென்ற வெங்கடேசன் படுக்கை அறையில் படுத்து தூங்கினார்.
மேலும் படிக்க: உல்லாசத்துக்கு அழைத்த 64 வயது முதியவர்.. மறுப்பு தெரிவித்த பெண்.. அடுத்து நடந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!




தூக்கத்திலேயே உயிரிழந்த ஓட்டுநர்
இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நீண்ட நேரம் ஆகியும் வெங்கடேசன் தூக்கத்தில் இருந்து எழும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை எழுப்ப முயன்றும் எழும்பவில்லை. சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வெங்கடேசனை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விரைந்து வந்து வெங்கடேசனின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கே. கே. நகர் இ எஸ் ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு?
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவர் இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் தனது மகன் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: செல்போன் மோகத்தில் மூழ்கிய மகள்.. ஒரு நொடி கண்டித்த தந்தை.. மறு நொடியே மாணவி எடுத்த விபரீத முடிவு!