அதிமுக எம்எல்ஏக்களை விலை பேசும் தவெக அரசு.. குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் எடப்பாடி தரப்பு பரபரப்பு புகார்!
TVK Horse Trading : அதிமுக எம்எல்ஏக்களை விலை பேசும் தமிழக வெற்றிக் கழகத்தின் குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பரபரப்பு புகார் மனு அளித்தனர் .
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. திமுக கூட்டணி 79 இடங்களிலும், அதிமுக கூட்டணி 47 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இதில், கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தொகுதிகள் இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக, திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. அவ்வாறு கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று தவெக தலைமை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அதிமுகவில் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கு ஏற்பட்டது.
ஆளுநர் அர்லேகரிடம் எடப்பாடி தரப்பு புகார்
இதனால், அதிமுகவில் இரு அணிகள் ஏற்பட்டது. அத்துடன் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்களை தமிழக வெற்றி கழகம் குதிரை பேரம் நடத்தி தங்களது கட்சியில் இணைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி, அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ, தனபால் எம். பி. உள்ளிட்டோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
மேலும் படிக்க: பொது மக்களை அரிவாளால் வெட்டிய கும்பல்.. தென்காசி – நெல்லையில் போலீசார் அதிரடி வேட்டை.. சுட்டு பிடிக்க உத்தரவு?




தவெக அரசின் குதிரை பேரத்தை தடுக்க வேண்டும்
இதை தொடர்ந்து, அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி எம். எல். ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். குதிரை பேரம் தொடர்பாக சட்டப்பேரவை செயலர், தலைமைச் செயலர் ஆகியோரிடம் ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும். அதிமுக எம்எல்ஏக்களை விலை பேசிய தவெக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.
அதிமுக எம்எல்ஏ ராஜினாமாவை ஏற்றது தவறு
அதிமுக எம்எல்ஏக்கள் மீதான கட்சி தாவல் தடை சட்ட நடவடிக்கை கோரிய மனு நிலுவையில் உள்ளது. இந்த மனு நிலுவையில் இருக்கும் போது எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றது தவறாகும். தற்போது, தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டினார். இதில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூரத்தி எம்எல்ஏ.
மேலும் படிக்க: புதுச்சேரிக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் 2 புதிய “எஸ்இசி” திட்டங்கள்… 8,500 பேருக்கு வேலை வாய்ப்பு!