தேர்தல் களத்துக்கு பின் மீண்டும் திருச்சி பயணம்… ஜூன் 1 இல் தொகுதி மக்களை சந்திக்க முதல்வர் விஜய் திட்டம்?
CM Vijay Visit To Trichy: முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகிற ஜூன் 1- ஆம் தேதி திருச்சி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தின் போது, திருச்சி கிழக்கு தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளாராம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இதில், ஆட்சி அமைக்க தேவையான 118 தொகுதிகள் இல்லாத காரணத்தால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதன்படி, தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் கடந்த மே 10- ஆம் தேதி பதவி ஏற்றார். இதற்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகிற ஜூன் 1- ஆம் தேதி ( திங்கள்கிழமை) திருச்சி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு, திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கல்லூரி மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி
இதற்காக திருச்சி தூய வளவனார் கல்லூரி மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் தங்களது தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். இதற்காகவே, தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் திருச்சி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பள்ளி – கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு… சீருடை – ஐடி கார்டு இருந்தாலே பேருந்தில் இலவச பயணம்!




திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றில் ஜோசப் விஜய் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதில், இரு தொகுதிகளிலும் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெற்றி பெற்றிருந்தார். இதில், அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்எல்ஏவாக இருக்க முடியும் என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்தார்.
திருச்சி கிழக்கில் விரைவில் இடைத் தேர்தல்
அதன்படி, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டார். இந்த நிலையில், திருச்சியை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில், லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தவெக வேட்பாளர், முன்னாள் ஆட்சியர் சகாயம் உள்ளிட்டோரில் ஒருவரை வேட்பாளராக களம் இறக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மனம்போன போக்கில் குண்டர் சட்டம் பாய்வதா? லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!