பள்ளி – கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு… சீருடை – ஐடி கார்டு இருந்தாலே பேருந்தில் இலவச பயணம்!
School And College Students Free Bus: தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது அடையாள அட்டை, சீருடை அணிந்து அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4- ஆம் தேதி ( வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பல் தொழில்நுட்ப கல்லூரிகள், அரசு தொழில் பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2026-2027- ஆம் கல்வியாண்டுக்கு கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு தேவையான கால அளவை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து அரசு பேருந்துகளில் தாங்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி வரை கட்டணம் இன்றி சென்று வரலாம் என்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்
இதேபோல, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் தங்களது கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை பேருந்தின் நடத்துனரிடம் காண்பித்து கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். மேலும், பள்ளிகள் தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரம் வரை அரசு பேருந்துகள் சரியான முறையில் இயங்குவதை கண்காணிப்பதற்காக போக்குவரத்து கழக அலுவலர்கள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பள்ளிக் கட்டண விவகாரத்தில் அதிரடி உத்தரவு: தனியார் பள்ளிகள் இதை செய்தே ஆகணும்..!




அரசு பேருந்து ஓட்டுநர்-நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்
மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்லவும் அனைத்து தமிழக அரசு போக்குவரத்து கழக நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு காலை உணவு, மதிய உணவு, இலவச சீருடை, இலவச பேருந்து பயணம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது.
அடையாள அட்டை – சீருடையுடன் இலவச பயணம்
அந்த வகையில், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் எவ்வித சிரமமும் இன்றி பள்ளி, கல்லூரிகள் சென்று வருவதற்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை அரசு சார்பில் வழங்கப்படும். தற்போது, பள்ளிகள் ஜூன் 4- இல் திறக்கப்பட உள்ள நிலையில், அவர்களுக்கான பேருந்து இலவச பயண அட்டை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு முன்னதாக இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: ஸ்டைலாக என்ட்ரி கொடுத்த முதல்வர் விஜய்.. தலைமை செயலகத்தில் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் ஜொலிப்பு!