தமிழகத்துக்கு புதிய டிஜிபி நியமனம்.. டெல்லி டூ சென்னை… யார் இந்த மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ்!
Tamil Nadu New DGP Mahesh Kumar Agarwal IPS: தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூன்று அதிகாரிகள் பட்டியலில் இருந்த இவர் டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை பற்றிய விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே, ஜி. வெங்கட்ராமன் என்பவர் பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால தமிழகத்தின் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்துக்கான நிரந்தர டிஜிபியை தேர்வு செய்வதற்காக 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை யுபிஎஸ்சி தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பி வைத்திருந்தது. அதில், ராஜீவ் குமார் ஐபிஎஸ், சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இதற்கு யுபிஎஸ்சி தேர்வாணையம் ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில், தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வாலை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
யார் இந்த மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ்
தமிழகத்தின் டிஜிபியாக விரைவில் பதவி ஏற்க இருக்கும் இந்த மகேஷ் குமார் ஐபிஎஸ் என்பவர் யார் என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த 1994- ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்த மகேஷ் குமார் அகர்வால் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். இவர், தனுது 22- ஆவது வயதில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று காவல் பணியில் சேர்ந்தார். இதில், சென்னை பெருநகர காவல் ஆணையராகவும், சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளில் பணிபுரிந்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற கூட்டம் ஜூலையில் கூடுகிறது.. தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?




குடியரசுத் தலைவர் – முதல்வர் பதக்கம் பெற்றவர்
மேலும், நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி, தமிழக ஆயுதப்படை டிஜிபி, எல்லை காவல் படை டிஜிபி, பி. எஸ். எஃப். படையில் டிஜிபி- ஆக பணிபுரிந்துள்ளார். மேலும், சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பொது சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதல்வர் பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார். இதில், சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ. 5.78 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் மகேஷ் குமார் அகர்வால் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் கொள்ளையர்களை கைது செய்திருந்தனர்.
ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவத்தில்
இதே போல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு மற்றும் சென்னை பெண் இன்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் திறம்பட விசாரணை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, டெல்லியில் பணிபுரிந்து வரும் மகேஷ் குமார் அகர்வால் ஒரு சில நாட்களில் தமிழகம் வந்து புதிய டி.ஜி.பி.யாக பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாடு தாங்காது “சிஎம் சார்”… சட்டம் – ஒழுங்கு குறித்து உதயநிதி காட்டமான விமர்சனம்!