சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம்.. த.வெ.க நிர்வாகி என்றால் ஒரு சட்டம் – மாற்றுத்திறனாளி காவல் மரணத்தில் உதயநிதி கேள்வி..
சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூலை 14, 2026: “சாமானியருக்கு ஒரு சட்டம்; தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்றால் வேறொரு சட்டமா? காவல்துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது” என, நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி இளைஞர் காவல் மரணம் தொடர்பாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலில் மாற்றுத்துறனாளி காவல் மரணம்:
கைது செய்யப்பட்டபோது நல்ல உடல்நலத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை அவரது உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், மாற்றுத்திறனாளி என்பதைக் கூட பொருட்படுத்தாமல் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் அவர் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டி, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காவல் மரணச் சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காவல் மரணம் குறித்து முதல்வர் பதில் சொல்ல வேண்டும்:
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால்… pic.twitter.com/HrHyuZkCTA
— Udhay (@Udhaystalin) July 14, 2026
இந்தச் சூழலில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்திருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
கைது செய்யப்பட்டபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டபோது உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்.
சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம்:
சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
மேலும் படிக்க: அதிமுக எம்.எல்.ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி.. திமுக – அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…
சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். சபரிவர்மனின் மரணத்திற்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.