மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தொடரும்… உள் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!
Tamil Nadu Weather: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் உள் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். வேலூரில் 41.6 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதால் வெப்ப அலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியது. பல மாவட்டங்களில் மழைப்பதிவு இல்லாத நிலையில், வெப்பநிலை இயல்பை விட உயர்ந்துள்ளது. குறிப்பாக உள் தமிழகத்தின் சில பகுதிகளில் பகல் நேர வெப்பம் அதிகரித்து, பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை அதிகமாக உணரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டும் மழைக்கு சாதகமான நிலை நீடித்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஜூலை 16-ஆம் தேதி அந்தப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 17 முதல் 20 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுடன் வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடையிடையே லேசானது முதல் மிதமான மழை பதிவாகக்கூடும். மற்ற உள் மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
உள் தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கும்
மழை வாய்ப்பு குறைவாக இருப்பதால், உள் தமிழகத்தில் ஜூலை 14 முதல் 16 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வெப்பநிலை மீண்டும் இயல்பு நிலையை ஒட்டியே காணப்படும் வாய்ப்பு உள்ளது.
வேலூரில் 41.6 டிகிரி… வெப்ப அலைக்கு வாய்ப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 41.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மறுபுறம், சமவெளிப் பகுதிகளில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 22.6 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையும், மலைப்பகுதிகளில் உதகமண்டலத்தில் 12.6 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. உள் தமிழகத்தின் சில பகுதிகளில் ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், வெப்ப அலை போன்ற சூழல் உருவாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும்
கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பத்துடன் ஈரப்பதமும் இணைவதால், மக்கள் வெப்பம் சார்ந்த அசௌகரியத்தை சந்திக்கக்கூடும். குறிப்பாக மதிய நேரங்களில் வெளிப்புற பணிகளை தவிர்த்து, போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடல் நலத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என வானிலை நிலவரம் சுட்டிக்காட்டுகிறது.
சென்னையில் 40 டிகிரியை நெருங்கும் வெப்பநிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வெப்பம் சார்ந்த அசௌகரியம் நிலவ வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலின் சில பகுதிகளில் ஜூலை 14 மற்றும் மீண்டும் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும். அந்தமான் கடல் மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகளிலும் இதேபோன்ற பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. எனவே அறிவுறுத்தப்பட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.