தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு.. திடீர் என்ட்ரி கொடுத்த அமலாக்கத்துறை.. தமிழக அரசியலில் புதிய புயல்!!
TVK MLA Bargaining Case ED Investigate: தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் திமுகவை சேர்ந்தவர்கள் பேரம் பேசியது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தாமாக முன்வந்து இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசை கவிழ்ப்பதற்காக கட்சியின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏவான இளையராஜாவிடம் ஐ. பி. டி. எஸ். நிறுவனத்தை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் ரூ.35 கோடி வரை பேரம் பேசி இருந்தனர். இது தொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அடிக்கடி செல்போனில் பேசியது தெரிய வந்தது. இதனால், குதிரை பேர வழக்கில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹவாலா பணம் கை மாறி இருப்பதாக காவல்துறை தெரிவித்ததை அடுத்து, இந்த வழக்கை அமலாக்கத்துறை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை
மேலும், ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் முன் ஜாமின் பெற்றுள்ள நிலையில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரை சேர்ந்த நரேஷ், கரூரை சேர்ந்த திமுக பிரமுகர்களான ரமேஷ், கார்த்திக் ஆகிய 5 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: ரேஷன் கடைகளில் விரைவில் ஸ்மார்ட் திட்டம்.. விரல் ரேகைக்கு குட்பை.. முகத்தை காட்டி பொருட்கள் வாங்கும் புதிய வசதி!




முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்பு
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்களுக்கு சம்மன் மற்றும் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இது மட்டும் இன்றி, சிங்கப்பூரில் இருந்த லட்சுமண பெருமாள் என்ற தொழில் அதிபர் சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த தொடர்பின் மூலமாகவே குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் லட்சுமண பெருமாளை தொடர்பு கொண்டு அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தவெக எம். எல். ஏ.க்களை இழுப்பதற்காக செல்போன் வாயிலாக பேசி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
சிங்கப்பூர் தொழிலதிபரை கைது செய்ய தீவிரம்
இவர், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பினாமியாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிப்பதற்கான முயற்சிகளை லட்சுமண பெருமாள் மேற்கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தொழிலதிபர் லட்சுமண பெருமாளை கைது செய்வதற்கு போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர் தொடர்பாக லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டு விமான நிலையங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “நலம் டிஎன்” இணையதளம் தொடங்கி வைப்பு.. இலட்சிணையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!