ரத்த வெள்ளத்தில் பெண் சடலம்.. 15 பவுன் கொள்ளை.. திருவள்ளூரில் அரங்கேறிய கொடூர கொலை சம்பவம்!
Thiruvallur Woman Murder: திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்து விட்டு 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இது தொடர்பாக திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், இதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி வனஜா ( 55 வயது). இட்லி மாவு விற்பனை செய்து வந்தார். தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ராதாகிருஷ்ணன் வழக்கம் போல காலை தனது மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வனஜா தனது கணவருக்கு டீ கொடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, மதியம் உணவு அருந்துவதற்காக ராதாகிருஷ்ணன் கடையில் இருந்து வீட்டிற்கு சென்றார். அப்போது, வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே, கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது வனஜாவின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
கழுத்தில் கத்தியால் குத்தி பெண் கொடூர கொலை
அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து பார்த்ததுடன், திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வனஜாவை பரிசோதித்ததில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அவரது சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: 18 பேரை காவு வாங்கிய திருவள்ளூர் கொடூர ஆலை.. மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி ஆக்ஷன்!




15 பவுன் தங்க நகைகள் கொள்ளை
இதில், வனஜாவிடம் இட்லி மாவு வாங்குவது போல வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், அவர் அணிந்து இருந்த தங்க தாலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட சுமார் 15 பவுன் தங்க நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து விரல் ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், இந்த கொலை மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் கைப்பற்றி ஆய்வு
இந்த பகுதிகள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப் பகலில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி கொன்று விட்டு நகைகளை பறித்து சென்ற சம்பவம் பழவேற்காடு பகுதியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை.. நடிகையை ஆபாச படம் எடுக்க முயன்ற கும்பல் சிக்கியது.. சென்னையில் சம்பவம்!