ரூ.5000 லஞ்சம்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை.. கம்பி எண்ணும் ராமநாதபுரம் சர்வேயர்!
Ramanathapuram Surveyor Arrested: ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டா நிலத்தை அளந்து கொடுப்பதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யராஜ் ( 38 வயது). இவர் ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் நில அளவேயராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இதே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பாம்பனில் உள்ள தனது பட்டா நிலத்தின் உள் பிரிவை அளந்து கொடுப்பதற்காக ஆன்லைன் வழியாக விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீதான பரிசீலனையை நில அளவேயர் சத்யராஜ் மேற்கொண்டார். அப்போது, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரை சர்வேயர் சத்யராஜ் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தங்களது பட்டா நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சத்யராஜ் கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த விண்ணப்பதாரர் தான் சாதாரண கூலி தொழில் செய்து வருவதாகவும், தன்னிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதை ஏற்க மறுத்த நில அளவையர் சத்யராஜ் நான் கேட்ட தொகை கண்டிப்பாக வேண்டும்.
நிலத்தை அளந்து கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்
இல்லை எனில், நிலத்தை அளவிட முடியாது. அத்துடன், தங்களது விண்ணப்பத்தையும் நிராகரித்து விடுவேன் என்று பகிரங்கமாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போதும், தன்னால் அவ்வளவு பெரிய தொகை வழங்க முடியாது என்று அந்த விண்ணப்பதாரர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நில அளவையர் சத்யராஜ் பேரம் பேசி உள்ளார். இதில், இரு தவணைகளாக பணத்தை பிரித்து வழங்குமாறு கூறியுள்ளார்.
மேலும் படிக்க: 18 பேரை காவு வாங்கிய திருவள்ளூர் கொடூர ஆலை.. மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி ஆக்ஷன்!




லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார்
இதனையும், அந்த விண்ணப்பதாரர் ஏற்க மறுத்ததுடன் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த விண்ணப்பதாரிடம் கொடுத்து சர்வேயர் சத்யராஜிடம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி, அந்த லஞ்சப் பணத்தை சர்வேயர் சத்யராஜ் இடம் அந்த நபர் கொடுத்தார்.
சர்வேயரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சர்வேயரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல, தென்காசி மாவட்டத்தில் நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதற்காக லஞ்சம் கேட்ட சர்வேயரை போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நெல்லை- தென்காசியில் நாளை மின் நிறுத்தம்… எங்கெங்கு தெரியுமா.. நோட் பண்ணுங்க மக்களே!