2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவெடுத்த தந்தை – மனைவியின் வீட்டில் நடந்த சோகம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாமியார் வீட்டில் இரண்டு குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவெடுத்த இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு பின்னர் தானும் விபரீத முடிவெடுத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சேலம், ஜூலை 14 : சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாமியார் வீட்டில் இரண்டு குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவெடுத்த இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேட்டூர் அடுத்த ஆண்டி கரையைச் சேர்ந்தவர் வல்லரசு (26) கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா (22) கரும்புச்சாறு விற்பனை கடை நடத்தி வருகிறார்.
2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவெடுத்த தந்தை
இவர்களுக்கு மைவிழி (4) தர்ஷன் (1)என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். மனைவி ஸ்ரீ பிரியா விற்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் ஸ்ரீ பிரியா மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல நேற்று வல்லரசு மேட்டூர் ராஜகணபதிநகரில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்தார்.
இந்த நிலையில் ஜூலை 13, 2026 நேற்று இரவு வல்லரசு தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்க சென்றார். இந்த நிலையில் ஜூலை 14, 2026 இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் மனைவி ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீ பிரியாவின் தாயார் வெண்ணிலா ஆகியோர் கதவை பலமாக தட்டிப் பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துப் பார்த்தனர்.
அப்போது இரண்டு குழந்தைகளும் துப்பட்டாவில் வீட்டின் இரும்பு சட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர். கட்டிடத் தொழிலாளி வல்லரசு தனது மனைவியின் சேலையில் விபரீத முடிவை தேடிக்கொண்டார் வல்லரசு தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு பின்னர் தானும் விபரீத முடிவெடுத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து மூன்று சடலங்களையும் மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாமியார் வீட்டில் மருமகன் குழந்தைகளை கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இறந்து போன சம்பவம் மேட்டூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)