திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சரிடம் ரூ.4 ஆயிரம் கையூட்டு பெற்ற அர்ச்சகர்.. வசமாக சிக்கியது எப்படி!
Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாறு வேடத்தில் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் விஐபி தரிசனத்திற்கு ரூ.4000 வாங்கிய அர்ச்சகர் கையும் களவுமாக பிடிபட்டார். தீவிர விசாரணைக்கு பிறகு அவர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் விஐபி தரிசனம் மேற்கொள்வதற்காக பக்தர்களிடம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அர்ச்சகர்கள் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிகாலை சாதாரண டீ சர்ட் மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்தவாறு பக்தர் போல திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்ய சென்றார். அப்போது, வரிசையில் நின்று கொண்டிருந்த அமைச்சரிடம் அங்கு பணியில் இருந்த அர்ச்சகர் ஒருவர் அமைச்சர் ரூ.4,000 கொடுத்தால் விஐபி தரிசனம் மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதன்படி, அமைச்சர் ரமேஷும் தனது ஜி பே மூலமாக ரூ.4000 த்தை அந்த அர்ச்சகரின் ஜி பே எண்ணுக்கு அனுப்பி உள்ளார். இதன் பின்னரே, அவர் அமைச்சர் என்பது அந்த அர்ச்சகருக்கு தெரியவந்தது.
அமைச்சரிடம் கையூட்டு பெற்று வசமாக சிக்கிய அர்ச்சகர்
இதைத் தொடர்ந்து, அந்த அர்ச்சகரிடம் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நேர விசாரணைக்கு பின்னர், அந்த அர்ச்சகர் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என்று கைப்பட விளக்க கடிதம் எழுதி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து அமைச்சர் விரிவான விசாரணை மேற்கொண்டார்.




மேலும் படிக்க: விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தி, ஆனால்.. திராவிட கட்சிகளின் எதிர்காலம் என்ன?.. வைகோ பளீச்!
திருச்செந்தூர் கோயிலில் வெளிப்படையான நிர்வாகம்
இந்த ஆய்வின் போது பக்தர்களிடம் விதிமுறைகளை மீறி பணம் வசூலித்தது என்பன உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அர்ச்சவர்களிடம் அமைச்சர் விளக்கம் கேட்டதுடன் விளக்க கடிதம் எழுதி தருமாறு உத்தரவிட்டார். மேலும், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.
முறைகேட்டில் ஈடுபடுபவர்கள்…
— TVK Ramesh (@RameshOffcl) May 29, 2026
முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை
மேலும், சுப்ரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், கோவில் சொத்து பதிவு விவரங்கள், கோயில் புனரமைப்பு பணிகள் மற்றும் கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் யார் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தார்.
மேலும் படிக்க: 15 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்.. புதிய இல்லத்திற்கு குடியேற்றம்.. காரணம் என்ன?