கர்நாடகத்திடம் தண்ணீருக்காக தமிழகம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை.. நாதக சீமான் சீற்றம்!
NTK Chief Coordinator Seeman : தமிழகத்தில் பெய்யும் மழை நீரை கூடுதலாக 1,500 டிஎம்சி சேமித்தால் கர்நாடக மாநில அரசிடம் வெறும் 150 டிஎம்சி தண்ணீருக்காக கெஞ்ச வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நதி நீரின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களும் தங்களது எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் 950 டிஎம்சி மழை நீர் கிடைக்கிறது. மொத்தமாக 4,000 டிஎம்சி மழைநீரில் சுமார் 1,500 டிஎம்சி மழைநீர் தான் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 2,500 டிஎம்சி மழைநீர் கடலில் வீணாக கலக்கிறது. இப்படி மழை நீர் வீணாவது பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்திடம் கெஞ்ச வேண்டாம்
கடலில் வீணாக கலக்கும் 2,500 டி. எம். சி. மழை நீரில் 1,500 டிஎம்சி மழை நீரை சேமித்தாலே தமிழகத்திற்கான குடிநீர் தேவை குறைந்து விடும். இதை விடுத்து விட்டு, வெறும் 150 டிஎம்சி தண்ணீருக்காக கர்நாடக மாநில அரசிடம் எதற்காக போய் நிற்க வேண்டும். இதே போல, நெய்வேலி பழுப்பு நிலக்கரி உனக்கு இல்லை. உன் பலம் உனக்கு. உன் நீர் வளம் உனக்கு. உன் நிலவ வளம் உனக்கு என்றால் என் நிலவலம் எனக்கு. இவ்வாறு சண்டை போடுவதற்கு ஒரு வீரன் தேவைப்படுகிறான்.
மேலும் படிக்க: ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் – மீண்டும் கடைகள் திறப்பு




மத்திய அரசு அலுவலங்களை பூட்டிய என்டிஆர்
அதற்கு ஏன் நீங்கள் இல்லை. மத்திய அரசு என்ன செய்துவிடும். பூட்டு அங்கு இருக்கும். ஆனால், அதற்கான சாவி என்கிட்டவே இருக்கும். இப்படி தான், என். டி. ஆர்.-ஐ அனைவரும் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். வெறும் நடிகர்தானே இவர் என்ன செய்து விடுவார் என்று கேலியாக பேசினார். மத்தியில் இந்திரா காந்தி மிகவும் ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார். ஒரே நாள் இரவில் மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களையும் பூட்டிவிட்டு சாவியை எடுத்து வந்துவிட்டார் என். டி. ஆர்.
தமிழக அரசியல்வாதிகள் மக்களுக்கு உண்மையாக இல்லை
பிறகு, அனைவரும் என். டி. ஆர். இடம் கெஞ்சி சமரசம் செய்த பின்னரே அலுவலகங்களின் கதவுகள் திறந்து விடப்பட்டது. இப்படி ஒரு நபர் தமிழகத்திற்கு வேண்டும். இப்படி இல்லாமல் அனைத்து விவகாரங்களுக்கும் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டு இருக்க முடியுமா. கர்நாடகா மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அந்த மாநிலத்துக்கு உண்மையாக இருக்கின்றனர். நீங்கள் உங்கள் மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறீர்களா. உங்களுக்கு வாக்கு செலுத்தி அதிகாரத்தில் உட்கார வைத்த மக்களை விட்டுவிட்டு இந்தியாவை காப்பாற்ற போறேன் என்று கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: வேளச்சேரியில் பயங்கரம்.. நடைப்பயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. இருவர் கைது!