விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தி, ஆனால்.. திராவிட கட்சிகளின் எதிர்காலம் என்ன?.. வைகோ பளீச்!
"மாநில முதலமைச்சர் என்பவர் 8 கோடி தமிழர்களின் பிரதிநிதி. அப்படிப்பட்ட ஒருவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கியும், பின்னர் உள்துறை அமைச்சர் வேண்டுமென்றே தவிர்த்திருந்தார் என்றால் அது கடுமையான கண்டனத்திற்குரியது. ஒரு முதலமைச்சரைச் சந்திப்பதற்கான வாய்ப்பை மறுப்பது முற்றிலும் தவறான அணுகுமுறை" என்று அமித்ஷாவின் போக்கைக் கண்டித்தார்.
சிதம்பரம், மே 29: முதலமைச்சர் விஜய் இந்தத் தேர்தலில் இவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறுவார் என்று நாங்கள் யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அண்மைக்கால தேர்தல் வெற்றி குறித்தும் தனது கருத்துக்களைப் பளீச்சென்று பகிர்ந்துள்ளார். அதன்படி, தேர்தல் முடிவுகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே நான் குறிப்பிட்டிருந்தேன், ‘விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்; தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியூட்டும் ஆச்சரியங்களைத் தரும்’ என்றேன். அதேபோலவே தற்போதைய முடிவுகள் அமைந்துள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு”.. முதல்வர் விஜய்க்கு இபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
அலை அலையாகத் திரண்ட மக்கள்:
மேலும், “நான் திமுக கூட்டணிக்காகத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டேன். விஜய் அவர்கள் ஒட்டுமொத்தமாக சில கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றார். ஆனால், அந்தக் கூட்டங்களுக்கு அலை அலையாகத் திரண்ட மக்கள் கூட்டத்தையும், அதன் தாக்கத்தையும் ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தன” என்று தவெகவின் தேர்தல் வெற்றிக்கான பின்னணியை விளக்கினார்.
திராவிட கட்சிகளின் எதிர்காலம்:
தவெக ஆட்சி அமைத்துவிட்டதாலேயே திராவிட கட்சிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது என வைகோ திட்டவட்டமாகக் கூறினார். “திமுக-வை போல ஒரு வலுவான உட்கட்டமைப்பு மற்றும் ஆர்கனைசேஷன் பலம் கொண்ட கட்சி இந்தியாவிலேயே கிடையாது. அதேபோல் அதிமுக-வும் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, மிகச்சிறந்த கட்டமைப்பைக் கொண்ட ஒரு கட்சிதான். எனவே ஒரு தேர்தல் முடிவை மட்டும் வைத்துக்கொண்டு திராவிட கட்சிகள் இனி அவ்வளவுதான் என்று கூற முடியாது” என்றார்.
MLAக்கள் ராஜினாமா குறித்த கேள்வி:
அதிமுக-வில் இருந்து எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டுத் தவெக கட்சியில் இணைப்பது ஆரோக்கியமான அரசியலா என்ற கேள்விக்கு, “ஒரு கட்சி ஆட்சி அமைப்பதற்கு மற்றொரு கட்சி ஆதரவு கொடுப்பதாக முடிவெடுக்கும் அரசியல் சூழலைப் போன்றதுதான் இதுவும். அதற்கு மேல் இதில் நான் ஆழமாகப் பேச விரும்பவில்லை, இதன் பின்னணியில் உள்ள அர்த்தம் உங்களுக்கே தெரியும்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
அமித்ஷாவின் போக்கிற்கு கண்டனம்:
முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றிருந்த போது, அவரைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என்ற செய்தி குறித்துக் காரசாரமான கருத்தை வைகோ பதிவு செய்தார். “மாநில முதலமைச்சர் என்பவர் 8 கோடி தமிழர்களின் பிரதிநிதி. அப்படிப்பட்ட ஒருவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கியும், பின்னர் உள்துறை அமைச்சர் வேண்டுமென்றே தவிர்த்திருந்தார் என்றால் அது கடுமையான கண்டனத்திற்குரியது. ஒரு முதலமைச்சரைச் சந்திப்பதற்கான வாய்ப்பை மறுப்பது முற்றிலும் தவறான அணுகுமுறை” என்று அமித்ஷாவின் போக்கைக் கண்டித்தார்.
இதையும் படிக்க: சென்னை கோடம்பாக்கத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: தலைமை காவலர் கைது
அரசியல் நாகரீகம் வேண்டும்:
தவெக ஆட்சிக்கு வந்து சில நாட்களேயான நிலையில், இந்த ஆட்சியின் ஆயுட்காலம் எவ்வளவு என்று இப்போதே ஜோசியம் கணிப்பது நாகரீகமான அரசியல் அணுகுமுறை அல்ல என்றும் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவுபடுத்தினார். இத்தகைய தேர்தல் சறுக்கல்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஒவ்வொரு திராவிட கட்சியும் சுயபரிசோதனை மற்றும் கள ஆய்வு செய்து கண்டறிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.