சென்னை கோடம்பாக்கத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: தலைமை காவலர் கைது
சென்னை கோடம்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த 16 வயது சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தலைமை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவன் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வடபழனி காவல் நிலைய தலைமை காவலர் வேலப்பன் சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த 16 வயது சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தலைமை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோயிலைச் சேர்ந்த அந்த சிறுவன் தனது பெற்றோர் மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறார். தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் அவர், குடும்பத்துடன் ஆன்மிக பயணத்திற்காக சென்னை வந்திருந்தார். குடும்பத்தினர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செல்வதற்காக வந்த நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
கோயில் பயணத்திற்குப் பிறகு உறவினர் வீட்டில் தங்கிய சிறுவன்
கடந்த 25ஆம் தேதி குடும்பத்துடன் சென்னை வந்த சிறுவன், மறுநாள் குடும்பத்தினருடன் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். பின்னர் மீண்டும் கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து, சிறுவன் மேலும் சில நாட்கள் மாமா வீட்டில் தங்கி இருக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரை உறவினர் வீட்டில் விட்டு விட்டு சொந்த ஊரான நாகர்கோயிலுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
மதுபோதையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில், நேற்று இரவு சிறுவன் உறவினர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, அவரது மாமா தனது நண்பரை வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். மது போதை அதிகரித்த நிலையில், உறவினர் அங்கேயே தூங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், மதுபோதையில் இருந்த நண்பர் சிறுவனை எழுப்பி, மீதமிருந்த மதுவை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிய சிறுவன்
இதனைத் தொடர்ந்து, அந்த நபர் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து அந்த நபரின் முகத்தில் தாக்கியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் கூச்சலிட்டு கதவை வெளியே பூட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். உடனடியாக அருகிலிருந்த அசோக் நகர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
சிறுவனின் புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் வேலப்பன் (35) என்பதும், அவர் காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், அவர் வடபழனி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும், கடந்த 2013ஆம் ஆண்டு காவல்துறையில் இணைந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் கைது
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் மாமாவுக்கும் காவலர் வேலப்பனுக்கும் நட்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக மது அருந்தியதாகவும் போலீசார் கண்டறிந்துள்ளனர். மதுபோதையில் காவலர் வேலப்பன் சிறுவனிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படும் நிலையில், அசோக் நகர் போலீசார் அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், சிறுவனின் மாமாவையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.