AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுகவின் கூடாரம் காலியாகிறதா? முன்னாள் எம்.பி. இளவசன் எடுத்த திடீர் முடிவு!

AIADMK Former MP Ilavarasan : அதிமுகவின் முன்னாள் எம். பி. ஆன இளவரசன் திடீரென அந்தக் கட்சியில் இருந்து விலகினார். அதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பி வைத்தார். விலகலுக்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவின் கூடாரம் காலியாகிறதா? முன்னாள் எம்.பி. இளவசன் எடுத்த திடீர் முடிவு!
அதிமுக முன்னாள் எம்பி இளவரசன் திடீர் விலகல்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 29 May 2026 12:15 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில், சட்டமன்ற குழு தலைவர் பதவியே பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ். பி. வேலுமணி ஆகியோர் தரப்பு இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்தது. இதில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எஸ்.பி வேலுமணி தரப்பு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிராகவும் வாக்களித்திருந்தது. இந்த நிலையில், இரு தரப்பு அணிகளும் ஒன்றாக இணைந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பை சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் அதிமுகவிலிருந்து அதிரடியாக விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதிமுக முன்னாள் எம்.பி. இளவரசன் விலகல்

இதே போல, மேலும் பலர் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்பி ஆன இளவரசன் அந்த கட்சியில் இருந்து தற்போது விலகி உள்ளார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ளார். இதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு கட்சியில் உழைத்தவர்களுக்கு மரியாதையில்லை என்றும் பணத்துக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிப்பதாகவும், அதன் காரணமாகவே 11 தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வியே சந்தித்ததாக இளவரசன் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் படிக்க: கர்நாடகத்திடம் தண்ணீருக்காக தமிழகம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை.. நாதக சீமான் சீற்றம்!

42 ஆண்டு கால அரசியல் வாழ்வில் கட்சி மாறியதில்லை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 1983 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் பல்வேறு பொறுப்புகளில் விசுவாசமாக பணியாற்றியுள்ளேன். கடந்த 42 ஆண்டுகளாக எந்த சூழ்நிலையிலும் கட்சி மாறியது கிடையாது. கட்சி பிளவு பட்ட போதும் எந்த அணியும் மாறவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் வாடும் தொண்டர்களில் நானும் ஒருவன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தோம்.

கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணம்

ஆனால், எடப்பாடி எடுத்த நடவடிக்கைகளால் கட்சி தொண்டர்கள் அனைவரும் நிலை குலைந்து போய் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அனைத்து தேர்தல்களிலும் உழைப்பு மற்றும் விசுவாசத்திற்கு இடமில்லாமல் போய் உள்ளது. புதியவர்களுக்கும், பணத்துக்கும் மட்டுமே மதிப்பு இருந்து வருகிறது. கட்சியின் தோல்விக்கு பொதுச்செயலாளர் என்ற முறையில் பொறுப்பேற்கவில்லை. இதைவிட கொடுமை எதிர்க்கட்சியான திமுக ஆதரவுடன் முதல்வர் ஆவதற்கும் துணிந்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. எனவே, கட்சியின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பொறுப்பு அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றிலிருந்து வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு”.. முதல்வர் விஜய்க்கு இபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

Follow Us