தமிழக சட்டமன்ற கூட்டம் ஜூலையில் கூடுகிறது.. தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?
TVK Govt First Lgislative Session: தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் மற்றும், முழு நிதி நிலை அறிக்கை தாக்கல் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது ஆகஸ்ட் மாதம் 2- ஆவது வாரம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த 17- ஆவது சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்ததுடன், காங்கிரஸ் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதன்படி, தமிழகத்தின் 12- ஆவது முதல் அமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் காரணமாக இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்ட மன்ற கூட்டம் வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்திலும், புதிய அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்திலும் தமிழத்தின் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்ற உள்ளார். அதன்படி, ஆளுநரின் உரையில் புதிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆளுநரின் உரையை தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கி நடைபெறும்.
மேலும் படிக்க: தமிழக மக்களுக்கு தவெக அரசு கொடுத்த ஒரே பரிசு மின்வெட்டுதான்.. பொங்கிய தமிழிசை சௌந்தரராஜன்!




2026 – 2027- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்
இதைத் தொடர்ந்து, 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார். இதில், தமிழக வெற்றிக் கழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர், தாலிக்கு ஒரு பவுன் தங்கம், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.
தவெக தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஒதுக்கீடு
அதன்படி, இந்த பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், அடுத்த 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து, துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். இதில், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிடுவார்கள். அதன்படி, ஆகஸ்ட் 2- ஆவது வாரம் வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திமுக கூட்டணி கட்சிகளால் தவெக ஆட்சியை மு.க.ஸ்டாலின் கவிழ்த்து விடுவாரா? மு.வீரபாண்டியன் கூறிய கருத்து!