பொது மக்களை அரிவாளால் வெட்டிய கும்பல்.. தென்காசி – நெல்லையில் போலீசார் அதிரடி வேட்டை.. சுட்டு பிடிக்க உத்தரவு?
Nettur And Manur Gang Attacked Civilians: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் இரு கிராமங்களில் கண்ணில் பட்ட பொது மக்களை அரிவாளால் வெட்டிய கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்கள் தாக்க முற்பட்டால் சுட்டு பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் அதே ஊரை சேர்ந்த இருவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது, அங்கு பைக்கில் வந்த முகமூடி அணிந்த சுமார் 12 பேர் கொண்ட கும்பல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியது. அத்துடன், திருமண மண்டபத்துக்குள் நுழைந்து சேர்கள், பேனர்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதுடன், அங்கு நின்று கொண்டிருந்த நெட்டூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த அருள்மாறன், அவரது தந்தை ரமேஷ், ராயப்பன், அனந்தபுரத்தை சேர்ந்த ராம்குமார், நெட்டுரை சேர்ந்த குமார், குலையனேரியை சேர்ந்த மேள கலைஞர் ஆகிய 6 பேரை அரிவாளால் பலமாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதைத் தொடர்ந்து, இந்த கும்பல் திருநெல்வேலி மாவட்டம், மானூர் கிராமத்தில் நுழைந்ததுடன், அங்கும் தனது கண்ணில் பட்ட இருவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றது.
மர்ம கும்பலை சேர்ந்த 4 பேர் கைது
அப்போது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த கும்பலை விரட்டி பிடித்து 4 பேரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 8 பேரும் ஆலங்குளம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார், ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சரிடம் ரூ.4 ஆயிரம் கையூட்டு பெற்ற அர்ச்சகர்.. வசமாக சிக்கியது எப்படி!




சம்பவ இடத்தில் இரு மாவட்ட எஸ்பிக்கள் விசாரணை
அப்போது, கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யக்கோரி அந்த கிராம மக்கள் திடீரென ஆலங்குளம்- ரெட்டியார்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், எஸ் பி அசோக்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறு தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி நெல்லை சரக டிஐஜி மற்றும் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குற்றவாளிகளை சுட்டு பிடிக்க உத்தரவு?
இந்த கும்பலை கைது செய்வதற்காக நெல்லை எஸ். பி. பிரசண்ண குமார் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் மற்றும் தென்காசி எஸ். பி. அசோக்குமார் தலைமையில் 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை பிடிக்கும் போது போலீசார் மீது எதிர் தாக்குதல் நடத்த முற்பட்டால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கவும் ரகசியமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அமைச்சரிடம் தரிசனத்துக்கு லஞ்சம்: இருவர் பணி நீக்கம் – அர்ச்சகர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்!