தூத்துக்குடியில் கொடூரம்.. மீனவரை துடிக்க துடிக்க வெட்டி கொலை செய்த 4 பேர் கும்பல்.. மூவரை தட்டி தூக்கிய போலீஸ்!
Thoothukudi Fisherman Murder : தூத்துக்குடி மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் மோதுவது போல வந்த காரணத்தால் ஏற்பட்ட தகராறில் மீனவர் 4 பேர் கொண்ட கும்பல் பயங்கரமான ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இதில், 3 பேர் கைதாகினர்.
தூத்துக்குடி மாவட்டம், வண்ணாரப்பேட்டை அருகே உள்ள ஆனந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் மாரி செல்வம் ( 21 வயது). மீன்பிடி தொழில் செய்து வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், மாரி செல்வம் நேற்று வியாழக்கிழமை காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு இரவு சுமார் 10 மணியளவில் கரை திரும்பினார். அப்போது, கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தில் மாரி செல்வம் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, தாளமுத்து நகர் அருகே உள்ள ஒரு கெபி அருகே சென்ற போது இதே பகுதி சோட்டையன் தோப்பை சேர்ந்த சண்முக கணேசன் மகன் சந்தனராஜ் ( 21 வயது) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் எதிர் திசையில் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, சந்தன ராஜ், மாரி செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல இரு சக்கர வாகனத்தை ஒட்டியதாக கூறப்படுகிறது.
இருவர் இடையே கடும் வாக்குவாதம் – மோதல்
இதனால், இருவர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மிகவும் ஆத்திரம் அடைந்த மாரி செல்வம் சந்தன ராஜை சரமாரியாக தாக்கி உள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இருந்தாலும், தன்னை தாக்கியதால் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்த சந்தனராஜ் மாரி செல்வத்தை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர்களான அண்ணா நகர் 12- ஆவது தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் புவனேஷ் குமார் ( 20 வயது), ஆனந்த் நகரை சேர்ந்த ராபர்ட் மகன் ஜாய்சன் ( 20 வயது), நேரு நகரை சேர்ந்த சண்முகம் மகன் ஹரிஹரன் ( 20 வயது) ஆகிய 3 பேருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் மாறி செல்வத்தை தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும் படிக்க: தமிழக மக்களுக்கு தவெக அரசு கொடுத்த ஒரே பரிசு மின்வெட்டுதான்.. பொங்கிய தமிழிசை சௌந்தரராஜன்!




மீனவரை பயங்கரமான ஆயுதங்களால் வெட்டி கொன்ற கும்பல்
அப்போது, நேரு நகர் கெபி அருகே நின்று கொண்டிருந்த மாரி செல்வத்தை நான்கு பேரும் சுற்றி வளைத்து பயங்கரமான அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில், பலத்த காயம் அடைந்த மாரி செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, 4 பேரும் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.
3 பேரை கைது செய்த போலீசார்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சந்தனராஜ், அவரது நண்பர் ஜாய்சன், ஹரிஹரன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். புவனேஷ் குமாரை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: திமுக கூட்டணி கட்சிகளால் தவெக ஆட்சியை மு.க.ஸ்டாலின் கவிழ்த்து விடுவாரா? மு.வீரபாண்டியன் கூறிய கருத்து!