தென்காசியில் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் 6 இளைஞர்கள் படுகாயம் – கிராம மக்கள் சாலை மறியல் – பரபரப்பு தகவல்
தென்காசி அருகே முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், அங்கிருந்தவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் 6 இளைஞர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தென்காசி , மே 28 : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் என்ற கிராமத்தில் மே 29, 2026 இன்று திருமண வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த முகமூடி அணிந்து வந்த ஆறு மர்ம நபர்கள், அங்கிருந்த 6 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆலங்குளம் மற்றும் திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் ஆலங்குளம் – சங்கரன்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் 6 இளைஞர்கள் படுகாயம்
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணி்பாளர் அசோக் குமாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆலங்குளம் – தென்காசி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தற்போது காவல்துறையினர் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : தமிழ்நாடு தாங்காது “சிஎம் சார்”… சட்டம் – ஒழுங்கு குறித்து உதயநிதி காட்டமான விமர்சனம்!




விசாரணையில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் அரிவாளுடன் வந்து அந்த பகுதியில் இருப்பவர்களை சராமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளனர். இதில் 6 இளைஞர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த சில நாட்களாக சட்ட ஒழுங்கு பிரச்னை தீவிரமடைந்திருப்பதாக எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சட்ட ஒழுங்கு பிரச்னை குறித்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க. நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க என்றார்.
இதையும் படிக்க : தூத்துக்குடியில் கொடூரம்.. மீனவரை துடிக்க துடிக்க வெட்டி கொலை செய்த 4 பேர் கும்பல்.. மூவரை தட்டி தூக்கிய போலீஸ்!
மேலும், சிங்கப்பெண் படைனு பேரையும், சீருடையயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா? நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார் என குறிப்பிட்டிருந்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் நாள்தோறும் அரங்கேறும் குற்றச்செயல்கள் பொதுமக்களிடையே மிகுந்த அச்சமூட்டும் வகையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.