இன்று தொடங்க இருந்த ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ திட்டம் திடீர் ரத்து.. 2-வது முறை தள்ளிப்போனதன் பின்னணி என்ன?
கடைசி நேரத்தில் இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்துக் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்திற்குப் புதிய டிஜிபி (DGP) ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மதியத்திற்கு மேல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை, மே 29: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இன்று (மே 29, 2026) மாலை தொடங்கப்படவிருந்த தமிழக அரசின் மிக முக்கிய திட்டமான ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி இரண்டாவது முறையாகத் தள்ளிப்போயிருப்பது காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் இதன் பின்னணி விவரங்கள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: அமைச்சரிடம் தரிசனத்துக்கு லஞ்சம் பெற்ற விவகாரம்: இருவர் மீது பாய்ந்த நடவடிக்கை.. அர்ச்சகரும் தப்பவில்லை!
முதல்வர் விஜய்யின் கனவுத் திட்டம்:
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் விதமாக ‘சிங்கப்பெண் அதிரடி திட்டம்’ உருவாக்கப்படும் என தனது தேர்தல் வாக்குறுதியிலேயே தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர், முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முதல் மூன்று முக்கிய கோப்புகளில், இந்த சிங்கப்பெண் அதிரடி திட்டத்திற்கான கோப்புதான் முதலாவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2 முறை ரத்தானது ஏன்? பின்னணி என்ன?
இந்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் முதலில் கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் முதலமைச்சர் விஜய் அவசரமாக டெல்லி பயணம் மேற்கொண்டதால், இந்தத் தொடக்க விழா நிகழ்ச்சி இன்றைய தினத்திற்கு (மே 29) தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முதலமைச்சர் முன்னிலையில் இத்திட்டம் பிரம்மாண்டமாகத் தொடங்கப்படவிருந்தது. ஆனால், இரண்டாவது முறையாக இன்று நடைபெற இருந்த விழாவும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிஜிபி மாற்றம் தான் காரணமா?
கடைசி நேரத்தில் இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்துக் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்திற்குப் புதிய டிஜிபி (DGP) ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மதியத்திற்கு மேல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த டிஜிபி மாற்ற நடைமுறைகள் காரணமாகவே இன்றைய சிங்கப்பெண் திட்டத் தொடக்க விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யின் சிறப்பம்சங்கள்:
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ள இந்தச் சிறப்புப் படையில் பின்வரும் கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த அதிரடிப்படை ஒரு ஐஜி (IG) தலைமையின் கீழ் செயல்படும். இதில் ஒரு எஸ்பி (SP), இரண்டு டிஎஸ்பிக்கள் (DSP), நான்கு காவல் ஆய்வாளர்கள் (Inspectors), எட்டு எஸ்.ஐக்கள் (SI) மற்றும் 20 பெண் காவலர்கள் அடங்குவர். பெண்களுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுத்தல் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனுக்குடன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதே இக்குழுவின் முக்கிய பணியாகும்.
இதையும் படிக்க : “திமுக ஆட்சியில் 35% வரை கமிஷன்”.. அமைச்சரிடம் ஒப்பந்ததாரர்கள் அடுக்கடுக்காக புகார்!!
இன்றைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தாலும், இன்றோ அல்லது நாளையோ இக்குழு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டு, இதற்கான பணிகள் உடனுக்குடன் முடுக்கிவிடப்படும் என்றும்; இத்திட்டம் எப்போது, எங்குத் தொடங்கப்படும் என்பது குறித்த புதிய அறிவிப்பைக் காவல்துறை விரைவில் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.