Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் மிதமான மழை இருக்கும்.. 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Rainfall Alert: தமிழகத்தில் நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வறண்ட வானிலை நிலவிய நிலையில், கடந்த வாரத்தில் டிட்வா புயலின் தாக்கத்தால் டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் வடகடலோர தமிழகத்தில் பரவலாக கனமழை பதிவானது. இது வரக்கூடிய நாட்களில் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிதமான மழை இருக்கும்.. 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Dec 2025 06:40 AM IST

வானிலை நிலவரம், டிசம்பர் 5, 2025:தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, நேற்று (04-12-2025) காலை மேலும் வலுவிழந்தது.இதன் காரணமாக வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் — குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் — நிலவிய கனமழை தற்போது குறைந்துள்ளது. இனிவரும் நாட்களில் வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

இந்த நிலையில், அரபிக்கடலில் உருவாகி இருக்கக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இடி – மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விஜய்யின் பொதுக்கூட்டம் எப்போ தெரியுமா? அனுமதி கேட்டு தவெக சார்பில் விண்ணப்பம்

அதனைத் தொடர்ந்து டிசம்பர் 6, 2025 முதல் டிசம்பர் 10, 2025 வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை மட்டுமே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வறண்ட வானிலை நிலவிய நிலையில், கடந்த வாரத்தில் டிட்வா புயலின் தாக்கத்தால் டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் வடகடலோர தமிழகத்தில் பரவலாக கனமழை பதிவானது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், வரவிருக்கும் நாட்களில் இந்த மழையின் தீவிரம் குறைந்து காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் இடி – மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  திருப்பரங்குன்றம் விவகாரம்… அரசின் மனுவில் மறைமுக நோக்கம்…. நிராகரித்த நீதிமன்றம்

தொடர் மழையின் காரணமாக வெப்பநிலையும் கணிசமாக குறைந்து காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அருகில் இருக்கக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.