நெல்லையில் பயங்கரம்.. போதை கும்பல் வெறியாட்டம்.. ஓட ஓட அரிவாள் வெட்டு.. இருவர் பலி..
Shocking incident in nellai nanguneri: தொடர்ந்து, அந்த கும்பல், அருகில் உள்ள கடம்போடுவாழ்வு கிராமத்திற்குள்ளும் புகுந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டியது. மேலும், அங்கிருந்த ஒரு பைக்கையும் திருடிக்கொண்டு அவர்கள் தப்பியோடினர். இந்த கொடூரத் தாக்குதலில் வெட்டுக்காயமடைந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.
நெல்லை, மார்ச் 03: நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் போதை கும்பல் நடத்திய கொலை வெறித் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் மாற்றுத்திறனாளி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். நெல்லை அருகே டீக்கடை உள்ளிட்ட 2 இடங்களில் அடுத்தடுத்து, பைக்கில் வந்த போதை கும்பல் வெறியாட்டம் நடத்தியுள்ளது. இச்சம்பவத்தின் போது, சாலையில் கண்ணில் சிக்கிய அனைவரின் மீதும் அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ஒரு வடமாநிலத் தொழிலாளி உட்பட ஒரு மாற்றுத்திறனாளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிக்க: “மனைவியின் நடத்தையில் சந்தேகம்”.. 2 மகள்களை கொன்ற தந்தை பரபரப்பு வாக்குமூலம்..
போதையில் வந்த மர்ம கும்பல்:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இந்திரா காலனி உள்ளது. இங்குள்ள ஒரு டீக்கடை முன் சிலர் நேற்று இரவில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது 3 பைக்குகளில் 9 பேர் கொண்ட மர்மகும்பல் மது போதையில் வந்துள்ளனர். அவர்கள் திடீரென்று அங்கிருந்த 6 பேரை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அந்த பகுதியில் பெட்ரோல் குண்டுகளையும் வீசி ஏறிந்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
2 பேர் சம்பவ இடத்திலேயே பலி:
தொடர்ந்து, அந்த கும்பல், அருகில் உள்ள கடம்போடுவாழ்வு கிராமத்திற்குள்ளும் புகுந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டியது. மேலும், அங்கிருந்த ஒரு பைக்கையும் திருடிக்கொண்டு அவர்கள் தப்பியோடினர். இந்த கொடூரத் தாக்குதலில் வெட்டுக்காயமடைந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதில் இந்திரா காலனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜான் (47) மற்றும் ஒரு வடமாநில இளைஞர் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை:
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நெல்சன் (45), கணேசன் (58), பிரபாகரன், ராமசாமி, சக்திகுமார் உள்ளிட்ட ஏழு பேர் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்களால் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: பள்ளி மாணவர்களிடேயே ஏற்பட்ட தகராறு… சிறுவனை கொலைசெய்த மர்ம கும்பல்
தனிப்படை அமைத்து தேடி வரும் காவல்துறை:
தகவலறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தாக்குதலுக்கான உடனடி காரணம் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு, மர்ம கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போதை கும்பலின் இந்த பயங்கர வெறியாட்ட சம்பவம், அப்பகுதியினரிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.