தொகுதி மறுவரையறை மசோதா.. திமுக ஆதரவை பாஜக கோரும்.. மத்திய அமைச்சர் அத்வாலே!
Union Minister Ramdas Athawale : நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவை நாடுவோம் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். இந்த மசோதோ நிறைவேறுவது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார் .
இந்தியாவில் தொகுதி மறுவரையறை செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றுவதற்கு திமுகவின் ஆதரவை பாரதீய ஜனதா கட்சி நாடும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை மந்திரியும், இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவருமான ராம்தாஸ் அத்வாவே தெரிவித்தார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள், கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க தமிழக அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் 8,352 கலப்பு திருமணங்கள் நடந்துள்ளன. அமைச்சர்கள் சம்பத்குமார், வன்னி அரசு ஆகியோர் அளித்த துரை சம்பந்தமான கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். கடந்த முறை தோல்வி அடைந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறு வரையறை ஆகிய 2 மசோதாக்களும் வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்.
தொகுதி மறுவரையறை மசோதா
இண்டியா கூட்டணியில் காங்கிரஸ்- திமுக இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 20 எம்பிக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு மூலம் இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற வாய்ப்பு அதிகம் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை திராவிட முன்னேற்ற கழகம் எடுக்கும் அல்லது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை புறக்கணிக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லையெனில், தொகுதி மறு வரையறை மசோதா நிறைவேற ஆதரவு தெரிவிக்குமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திடம், பாரதிய ஜனதா கட்சியின் தலைமை பேச்சுவார்த்தை நடத்தும்.
மேலும் படிக்க: தமிழகம் முழுவதும் பரபரப்பு.. வட்டாட்சியர் அலுவலகங்களை அலறவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!




பாஜக ஆதரவை தவெக கோரும் என எதிர்பார்த்தோம்
தமிழகத்தில் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வருவது வரவேற்கத்தக்கதாகும். தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆதரவை கேட்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், திராவிட முன்னேற்ற கழக கூட்டணியை சேர்ந்த தோழமை கட்சிகளின் ஆதரவை பெற்று தற்போது ஆட்சி அமைத்துள்ளது.
சமூகநீதித்துறை பெயர் மாற்றம் வரவேற்கத்தக்கது
தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். இதற்காக மத்திய அரசு தயாராக உள்ளது. தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதித்துறை என பெயர் மாற்றியது வரவேற்கத்தக்கதாகும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
மேலும் படிக்க: 2 பெரும் தவறுகளை செய்து விட்டேன்.. அதிமுக-திமுகவை குறிப்பிட்டு வைகோ விமர்சனம்!