புதுச்சேரிக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் 2 புதிய “எஸ்இசி” திட்டங்கள்… 8,500 பேருக்கு வேலை வாய்ப்பு!
Puducherry Special Economic Zones புதுச்சேரி மாநிலத்தில் ரூ.1,975 கோடியில் இரு இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ரூ.1,975 கோடியில் இரு புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிறப்பு பொருளாதார மண்டல வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உழவர் கரை நகராட்சி மூலமாக தட்டாஞ்சாவடியில் ஐடி., ஐடிஇஎஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இது இந்தியாவில் ஒரு நகராட்சி அமைப்பால் உருவாக்கப்படும் முதல் திட்டம் ஆகும். இதே போல, வில்லியனூர் வட்டத்தில் உள்ள கரசூரில் புதுச்சேரி தொழில் மேம்பாடு மற்றும் முதலீட்டு கழகம் சார்பில் பல்நோக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. புதுச்சேரி மாநில தொழில் வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு பொருளாதார மண்டங்களில் 8,500 பேருக்கு வேலை வாய்ப்பு
இதில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தட்டாஞ்சாவடி பகுதியில் 8.6 ஹெக்டேரில் அமையும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.725 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 3, 500 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவர்கள் ஐடி., ஐடிஇஎஸ் ஆகிய துறைகளில் பணி புரியலாம். இதே போல, கரசூரில் சுமார் 86.2 ஹெக்டேரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இங்கு, ரூ.1,250 கோடியில் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம், சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் படிக்க: பள்ளி – கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு… சீருடை – ஐடி கார்டு இருந்தாலே பேருந்தில் இலவச பயணம்!




ரூ.1,975 கோடியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
இங்கு பல்வேறு துறை சார்ந்த பணிகள் செயல்பட உள்ளன. மொத்தத்தில் இந்த இரு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ரூ.1,975 கோடி முதலீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகம், அந்தமான் மற்றும் புதுச்சேரி ஆகிய பிராந்தியங்களில் தொழில் சூழல் வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு வகைப்பட்ட துறைகள் மற்றும் பெரிய அளவிலான திட்டங்கள் பிராந்திய பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பதை உறுதி செய்து வருகிறது.
இந்தியாவின் தொழில் கட்டமைப்பை வலுப்படுத்த அடித்தளம்
இந்தியாவின் தொழில், உற்பத்தி மற்றும் சேவை துறை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை வலுப்படுவதை பொருளாதார மண்டலங்கள் பிரதிபலிக்கிறது. இவ்வாறான வளர்ச்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் உதவியாக அமைகிறது. அத்துடன், அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவின் தொழில் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு பொருளாதார மண்டலங்கள் அடித்தளமாக அமையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: வேட்பாளர்களே அலர்ட்.. ஜூன் 3-க்குள் தேர்தல் செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும்.. கெடு விதித்த தேர்தல் ஆணையம்!