வேட்பாளர்களே அலர்ட்.. ஜூன் 3-க்குள் தேர்தல் செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும்.. கெடு விதித்த தேர்தல் ஆணையம்!
Candidates Election Expenditure Accounts : சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவின கணக்கு விவரங்களை ஜூன் 3- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் கடந்த மே 4- ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தன. இந்த தேர்தலில், 234 சட்டமன்ற தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒவ்வொரு வேட்பாளர்களும் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் உச்ச வரம்பை நிர்ணயம் செய்திருந்தது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் அனைவரும் தங்களுக்கான தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, வருகிற ஜூன் 3- ஆம் தேதிக்குள் ( புதன்கிழமை) தேர்தல் செலவு கணக்கு தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கு விவரங்களை சரி பார்ப்பதற்காக தேர்தல் செலவின பார்வையாளர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வருகை தந்துள்ளனர்.
ஜூன் 3- ஆம் தேதிக்குள் தேர்தல் செலவினங்களை சமர்ப்பிக்க வேண்டும்
இவர்களிடம் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் தேர்தல் செலவு கணக்குகள் மற்றும் அதற்கான ரசீதுகள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதனை தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்து, அவை சரியாக இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பார்கள். இல்லையெனில், தேர்தல் செலவு கணக்குகளுக்கு தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை மீண்டும் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.
மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற கூட்டம் ஜூலையில் கூடுகிறது.. தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?




தேர்தல் செலவினங்கள் ஆய்வு செய்யும் பணி தொடக்கம்
தற்போது, மற்ற வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் செலவு கணக்குகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு கணக்கு விவரங்களை செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தல் செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்வதற்கு ஜூன் 3- ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அதற்குப் பிறகு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய முடியாது. எனவே, குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்
இல்லையெனில், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் விளக்க நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கு வேட்பாளர்கள் உரிய பதிலை அளித்தாக வேண்டும். உரிய பதிலை அளிக்காத வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அரசிதழில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும். அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்படும் வேட்பாளர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நடைபெறும் எந்த விதமான தேர்தலிலும் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்துக்கு புதிய டிஜிபி நியமனம்.. டெல்லி டூ சென்னை… யார் இந்த மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ்!